Saturday, May 9, 2020



பிரபஞ்ச உற்பத்தி

அருவினிலுருவந் தோன்றி யங்காங்கி பாவமாகி
யுருவினி லுருவமாயே யுதித்திடு மூலகமெல்லாம்.
பெருகிடுஞ் சுருங்கும்பேதா பேதமோ டபேதமர்கும்
ஒருவனே யெல்லாமாகி யல்லவா யுடனுமாவன்.

ஒழுங்காயும், முறையாயும், கொண்டுவரப்பட்டு நம்முடைய கட்புலனுக்குத் தோன்றுவன வெல்லாம் பிரபஞ்சம் என்று சொல்லப்படும். பிரபஞ்சம் அங்கப் பிரபஞ்சம் (Organic), அங்கமற்றபிரபஞ்சம் (Inorganic) என்றிருவகைப்படும். பல வகையான அவயவங்களோடு கூடி வளருதற்கு ஏதுவானதும், அங்ஙனம் வள.ருவதினால் அது உயிரோடு கூடியதாகத்தா னிருக்கவேண்டுமெனஊகிக்கக் கூடியதுமான பிரபஞ்சமே அங்க பிரபஞ்சமென்றும்,அவயவ வளர்ச்சியின்றியும், அவ்விதமிருப்பதனால் உயிரற்றதெனஊகிக்க இடந்தந்து நிற்பதுமான பிரபஞ்சமே அங்கமற்ற பிரபஞ்சமென்றும் சொல்லப்படும். என்னுடைய சரீரம் அங்க பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகும். நான் வசிக்கும் வீடு அங்கமற்ற பிரபஞ்சத்தின் ஓர் பகுதியாகும். இவ்விரு பிரபஞ்சங்களும் ஒன்றனுக்கொன்று மிக மாறுபட்டநிலையை உடையவார் யிருப்பினும்ஒரு பிரபஞ்சமின்றி மற்றொரு பிரபஞ்சம் நிலைபெறுதல் எவ்வகையினுஞ் சாத்தியமாகாவாறு அவ்வளவு நெருங்கிய சம்பந்தத்தை இரண்டும் உடைத்தாயிருக்கின்றன.
இனி, அங்க பிரபஞ்சம் அங்கமற்ற பிரபஞ்சம் இரண்டிற்கும் வித்தியாசம் யாது? என்னுடைய சரீரத்திற்கும் ஓர் தங்கக்கட்டிக்கும் இருக்கும் பேதம் என்ன? என்பதைச் சிறி தாராய்வோம். குழந்தைப்பருவத்தில் என்னுடைய சரீரம் எப்படியிருந்ததோ அப்படியே இப்போதில்லை. இரண்டு வருஷத்திற்கு முன்இருந்தது போலவும் இப்போது இல்லை. நேற்று என் சரீரம் இருந்ததற்கும் இன்று இருப்பதற்கும் எவ்வளவோ வித்தியாசங்கள்இருக்கின்றன, சென்ற நிமிஷத்தில் இருந்த அதேசரீரம் இந்த   நிமிஷத்தில் இல்லை. மிஷத்திற்கு நிமிஷம், கணத்திற்குக் கணம் எவ்வளவோ மாறுதல்களை என்னுடைய சரீரமடைகிறது. ஒரு தங்சக்கட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த இருபதுவருஷ காலமாக அத்தங்கக்கட்டி ஒருவனுடைய வசத்தில் அப்படியேஇருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதில் ஏதாவது மாறுதல் உண்டாகுமா? இருபது வருஷத்திற்கு முன்பு அந்தக்கட்டிஇருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் ஏதாவது வித்தியாசமிருக்கிறதா? இல்லை; முன் இருந்தது போலவே இப்போதுமிருசிறது. இருபது வருஷத்திற்குமுன் இருந்த நிறை, வடிவு, வண்ணம், பிரகாசம், முதலியவைகளே இப்போது மிருக்கின்றன.தங்கக்கட்டியில் தினைத்துணையு மாறுதல் ஏற்படவேயில்லை. ஆனால்என்னுடையசரீரம் இதே இருபது வருஷ காலத்திற்குள் எவ்வளவு மாறுதல்களை அடைந்திருக்கிறது.
பொன்னும் பலவகைப்பட்ட பணிகளாக ஆக்கப்படவில்லையோ? அதனால் அதனுடைய உருவம் மாறவில்லையோ? எனச்சிலர் வினவலாம். ஆனால், அம்மாதிரியான மாறுதல் தானாகவேஉண்டானதன்று. பொன்னை ஆபரணமாகச் செய்வதற்கு வேறொரு கம்மியன் வேண்டியிருக்கிறது. தங்கத்தை ஒரே இடத்தில் வைத்திருந்தோமானால் அந்தத் தங்கம் தானாகவே ஆபரணமாக மாறி விடுவதில்லை, இதனால் இந்தமாறுதல் வெளியிலிருந்து உண்டாகும் மாறுதலேயன்றி உள்ளிருந்து தானாகவே ஏற்படும்மாறுதல் அன்றென்று ஏற்படு தலால், மேற்கூறிய ஆட்சேபம் பயனற்றதாய் முடிந்தது.
ஆகவே, அங்க பிரபஞ்சம் அங்கமற்ற பிரபஞ்சம் இரண்டிற்கும் உள்ள மிகவும் முக்கியமான வித்தியாசம், முதலது வளருமியற்கை யுடையதென்பதும் அவ்விதம் வளர்ந்து வருங்கால் அநேகமாறுதல்களுக்கு உள்ளாகிறதென்பதும், பின்னது வளர்ச்சி சிறிதுமின்றியும், மாறுதல் சிறிதுமின்றியும் எக்காலத்தும், ஒரே தன்மையதா யிருக்கிறதென்பது மேயாம். இருவகையான பிரபஞ்சங்களுள் (Cosmos) ஒன்று! இடைவிடாது மாறுதல் அடையக்கூடியதாயும், மற்றொன்று என்றும் ஒரே தன்மையதாய்ச் சிறிதும் மாறுதலின்றியும் இருக்கக்காரண மென்னவென்று ஆராய்வோம். அவ்விதம் ஆராய்ச்சி செய்வோமானால், அங்கப் பிரபஞ்சத்தில் தானே இயங்கக்கூடியதான ஒர்சக்தி அமைந்திருக்கிறதென்றும்,அந்தச்சக்தியின் இடையறாத இயக்கத்தினாலேயே அவயவ வளர்ச்சிக்கு இன்றியமையாததான ஆற்றல் உற்பத்தி பாகிறதென்றும்,அங்கயற்ற பிரபஞ்சத்தில் அம்மாதிரியான தானே இயக்கும் சக்தி இல்லாதிருப்பதே அவயலவளர்ச்சி அப்பிரபஞ்சத்திற்கு ஏற்படாதிருப்பதற்குக் காரணமாமென்றும் புலப்படும். இவ்வுண்மையைப் புலப்படுத்த நாம் வேறு உதாரணம் தேட வேண்டுவதில்லை. முதலில் எடுத்துக்கொண்ட சரீரமும், தங்கக்கட்டியுமே போதுமானவை, என்னுடைய சரீரத்தை எடுத்துக்கொள்ளலாம், நான் பார்க்க விரும்பினால் என்னுடைய கண்கள் பார்க்கின்றன. நான் கேட்க விரும்பினால் என்னுடைய செவிகள் கேட்கின்றன. நான் ஓடுவதற்கு விரும்பினால் என்னுடைய கால்கள் அத்தொழிலைச் செய்கின்றன. தங்கக்கட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதனால் பார்க்கமுடியுமா? கேட்கமுடியுமா? ஓடமுடியுமா? ஒன்றும்அதனால் செய்யமுடியாது. இதற்குக் காரணமென்ன? என்னுடைய சரீரத்தில் அறிவோடு கூடிய பிராணசக்தி (conscious life - power) அமைந்து கிடப்பதும், தங்கக்கட்டியில் அம்மாதிரியான சக்தி இல்லாததுமே காரணமாம்.
ஆனால், அங்கப்பிரபஞ்சம், அங்கமற்ற பிரபஞ்சம் ஆகிய இரண்டும், இவ்விரண்டிற்கும் அடிப்படையான பொதுவானதோர்ஆற்றலின் பலனாக, உற்பத்தியானவை. அந்தப்பொதுவான ஓர்வஸ்துவின் ஆற்றலினால் இருவேறு வகையான பிரபஞ்சங்கள் உற்பத்தியாயின என்று நாம் வைத்துக்கொண்ட போதிலும், அப்படிப்பட்ட ஆற்றலையுடைய ஒருபொருள் பிராண சக்தியோடு கூடியபொருளா அல்லது பிராணசக்தியில்லாத பொருளா என்பதை ஆராய வேண்டும். அந்தப்பொருளில் பிராணசக்தி யில்லாது போனால், அந்த ஒரே வஸ்துவின் ஆற்றலினால் இரண்டு வேறு வகையான பிரபஞ்சங்கள் வியாபகமாதல் சாத்தியமாகாது. பிராணசக்தி இருந்தால் மட்டும், அச்சக்தி வரையறை யற்றதும் ஒழுங்கற்றதுமான பிரபஞ்சத்தில் பிரவேசித்துப் பிரபஞ்சத்தை ஒருவகைப்பட்ட ஒழுங்கிற்குக் கொண்டு வந்து படிப்படியாகக் கடைசியில்   பல அங்க பிரபஞ்ச பாக்கக்கூடும். இதனால் அங்கபிரபஞ்சம் உண்டாவதற்கும், அது வளருவதற்கும் அதனுள் பிராணசக்தி இன்றியமையாது இருத்தல் வேண்டுமென்பது பெறப்படுகிறதன்றோ. இம் மாதிரியே சிருட்டித் தொழிலைச் செய்யும் வஸ்துவும் பிராணசக்தியோடு கூடியதாயிருக்க வேண்டும். இந்தப் பிராணசக்தி எங்கே புலப்பட்டுத் தோன்றவில்லையோ அங்கெல்லாம் பிரபஞ்சத்தின் மூலகாரணம், முயற்சி சிறி துமின்றி வறிதேகிடக்கும். இம்மாதிரி பிராணசக்தியின் பிரவேசமின்றி வறிதேகிடக்கும் பிரபஞ்சங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன மனிதசஞ்சாரம் இல்லாமலும், புற்பூண்டுகள் இல்லாமலும், வெறுமையான அண்டங்கள் பல இருக்கின்றனவென்று மேனாட்டுச் சாத்திரியார்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். உ'பிரற்ற கற்களினால் ஆக்கப்பட்ட பிரமாண்டமான மலைகளைப்பாருங்கள் பிரகாசிக்கின்ற வைரங்களைப்போல் அந்த மலைகளின்மேல் உறைந்துகிடக்கும் பனிக்கட்டியைப் பாருங்கள் கணக்கிட முடியாதபடி தாவரப்பொருள்கள் அடுக்கடுக்காயிருக்கும் சுரங்கங்களைப் பாருங்கள் பிராணசக்தி சிறிதுமின்றி, கண்ணுக்குப் புலப்படாத அணுக்களிலுஞ் சிறியமணலால் சேர்க்கப்பட்டுக் கட்புலனுக்குத் தோன்றும் எல்லையற்ற இந்த மண்ணுலகத்தைப் பாருங்கள் இந்தப் பூமிமட்டு மேயன்று; சூரியனிலும்பன்மடங்கு பெரிதான எத்தனை உலகங்கள் வெகுதூரத்தில் அம்மனைகள் சுழல்வதுபோல் சுழன்று கொண்டிருக்கின்றன. இவ்வுலகங்களோடு நம்முடைய பூமியை ஒப்பிட்டால் இது ஒரு அணுவிற்குக்கூடச் சமானமாகாதே.
இம்மாதிரியாகப் பெரும் பகுதியான பிரபஞ்சம் பிராணசக்தியின்றி வறிதே கிடக்கக்காரணம் என்ன? இது ஏன் அங்கத்தோடுகூடி வளராமல் இருக்கின்றது? பிராணசக்தி நாளுக்குநாள்மாதத்திற்கு மாதம், வருஷத்திற்கு வருஷம் அமைத்து வருகிற அங்கபிரபஞ்சத்தை மென்மேலும் அபிவிர்த்திக்குக் கொண்டுவருதற்கு ஓர் சாதனமாகவே பெரும்பகுதியான பிரபஞ்சம் இம்பாதிரியான நிலையில் இருக்கிறது. அங்கமற்ற பிரபஞ்சத்திலிருந்தே அங்கபிரபஞ்சம் நாளடைவில் உண்டாகிறது. எவ்விதமெனில்,அதிசூக்குமமான அசுத்த மாயையிலிருக்கும் சிறு அணுக்களெல்லாம் ஒன்று சேர்ந்து திரண்டு கண்ணுக்குப் புலப்படும்படியான தூல உருவாசத்தோன்றும். மாயை என்பதற்குப் பிராணசக்தியற்ற சடப்பொருள் (master) என்று பொருள். அப்படிப்பட்டபொருளின் வியாபகமே இந்தப் பிரபஞ்சமாதலால், இந்தப் பிரபஞ்சம் மாயாப்பிரபஞ்சம் என்று பெயர் பெறுவதாயிற்று. மாயாபிரபஞ்சமென்றால் மாயையினின்றும் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்சம் என்று அருத்தம். மாயையினின்றும் உற்பத்தியான இவ்வுலகம் முதலில் அங்கமற்றதாயிருந்து பிறகு பிராணசக்தியின் இயக்கத்தினால் அங்கபிரபஞ்சமாகித்தானே வளரும் நிலைமையை அடையும். இவ்விதமான நிலைமைக்குவர மிகவும் நாட்செல்லுமாயினும், கோடிக்கணக்கான வருஷங்கள் சென்றபின்பு, அங்கமற்ற பிரபஞ்சமென்பதேயின்றி எல்லாம் அங்கத்தோடு கூடியனவாயும், பிராணசக்தியுடையன வாயுமாகிற ஓர் காலம் வரும்.
பிரபஞ்ச உற்பத்திக்கு மூலகாரணமான பொருள் ஒன்று இருக்கிறதென்றும் அந்தப்பொருள் பிராணசக்தி யமைந்ததோர் பொருளாகவே இருத்தல்வேண்டு மென்றும், முன்பு கூறினாமன்றோ? அந்தப் பொருளுடன் பிரிவற்று நிற்கும் சக்தியானது, ஒரே பொதுமையான வஸ்துவிலிருந்து பலவேறு வகைப்பட்ட அங்கப்பிரபஞ்சங்களையும் அங்கமற்ற பிரபஞ்சங்களையும் கட்புலனுக்குத் தெரியும்படி சூக்கும அணுத்திரள்கனை ஒன்று சேர்த்து, சிருஷ்டிக்கிறது. இந்தப் பொதுமையான மூலகாரண வஸ்துவை உபநிடதங்கள் அனிர் வசனீயம் என்னும் பெயரால் கூறுகின்றன. இப்படிப்பட்ட வஸ்து வென்று ஒருவாற்றானும் உரைக்கவும் அறிபவும் கூடாதபடி இவ்வஸ்து அத்துணைச்சூக்குமமாக இருக்கும்.இவ்வஸ்துவுடன் உணர்வோடு கூடிய அறிவுப்பொருளொன்று இருந்து வருகின்றது. அறிவற்ற சடப்பொருளாகிய அவ்வஸ்துவும் அறிவுள்ள சித்துப் பொருளாகிய இவ்வஸ்துவும் தனித்தனி வெவ்வேறாகவுள்ள பொருட்களாம் என்னும் பேதந்தோன்றாவாறு இரண்டும் ஒன்றானோடொன்று மிகநெருங்கிய சம்பந்தமுற்றிருக்கும். பின்சொன்ன அறிவுப்பொருள் முற்கூறிய சடவஸ்துவைவிட மிகச்சூக்குமமானதாயும் அறிவு நிரம்பியதாயு மிருப்பதாம் என்பது ஈண்டு கவனிக்கற்பாலது.  .
இங்ஙனம் சடப்பொருளாகிய வஸ்தும் அறிவுப் பொருளாகிய வஸ்துவும் ஒன்றனுக் கொன்று பேதந்தோன்றாவாறு நெருங்கிய சம்பந்தம் பெற்றிருப்பதை அறியாமல் சடப்பொருள் என்பதொன்று அறிவுப்பொருளாகிய வஸ்துவின் வேறாகக் கிடையாதென்று ஒரு சாரார் வாதிப்பர். சடப்பொருளிலிருந்தே அறிவுப்பொரு ளுண்டாயிற்றென மற்றொரு சாரார் வாதிப்பர். இவர்களுடைய வாதம் பொருந்தாத மென்பதைப் பின்னர் விளங்கக் காட்டுவாம். அதற்கு முன்பு மாயாவாதிகள் இதுசம்பந்தமாய் வினவும் ஆட்சேபங்களுக்கு விடைகூறி அவர் தம் வினாக்கள் போலி வினாக்களாமென்பதை நிருபிப்பாம்.'பிரபஞ்ச உற்பத்திக்கு அறிவுப் பொருளின் வேறாக அதிசூக்குமமாக இருக்கும் சடப்பொருளே மூலகாரணம் என்பதை யாங்ஙனம் விளக்குவீர்? இவ்வுலகசிருட்டிக்கு ஆன்மாவே மூலகா ரணமன்றோ? இன்ன தன்மையது உன்று ஒருவாற்றானும் விளக்கமுடியாத அதிசூக்குமமானசடப்பொருள் ஒன்று இருக்கிற தென்றுவைத்துக் கொண்டு அதைப் பிரபஞ்சசிருட்டிக்கு மூலகாரணமாகக் கூறுவானேன்?' என்று இன்னோரன்ன பல வினாக்களை மாயவாதிகள் வினவுகிறார்கள். இவ்வினாக்களுக்கு விடை கூறிச் செல்வாம்.
தூலமாயும் கட்புலனுக்குத் தோன்றுவதாயும் உள்ள சடப்பொருளாகிய இந்தப்பிரபஞ்சம் சூக்குமமாயும் கட்புலனுக்குத் தோன்றாததாயுமுள்ள சடப்பொருளிலிருந்தே உண்டாயிருத்தல் வேண்டும். உயிருள்ள அறிவுப் பொருளிலிருந்து உயிரில்லாத அறிவற்ற சடப்பொருள் உண்டாகுமென்றல் எவ்வாற்றாலும் பொருந்தாதாம். ஏனெனில், இவ்விரண்டு பொருட்களும் தம்முள்முற்றும் மாறபட்ட இலக்கணமுடையன. இப்போது கண்ணுக்குப் புலப்படும் படியாய் ஸ்தூலமாய் ஒன்று சேர்ந்திருக்கும் சடப்பொருளின் அணுக்கள் இன்னும் பலகோடி வருஷங்கள் சென்றால் தனித்தனியாகப் பிரிந்து கண்ணுக்குப் புலப்படாத சூக்குமநிலையை அடையும். நீங்கள் ஒருசிறு விதையைப் பூமியில் விதைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். முதலில் அது வேரூன்றி, துளிர்த்து வருகிறது. அதன் பிறகு இலைகள், கிளைகள், முதலியனஉண்டாகின்றன. இப்படியே அது வளர்ந்து கொண்டு போனால். கடைசியில் அது காய்த்துப்பழுக்கிறது. பழத்தின் விதையை மறுபடியும் எடுத்து விதைக்கிறோம். இதனால் மூலகாரணமானவஸ்து விதையென்றும், அதிலிருந்து இலை, தளிர், கிளை முதலியன உற்பத்தியாகின்றன வென்றும், அவைகளின் சத்தெல்லாம் கடைசியில் மூலகாரணமாகிய விதையில் ஒடுங்கி விடுகிறதென்றும் புலப்படுகிறதன்றே?
மற்றோர் உதாரணமுங் கூறுகின்றாம். குயவன் களி மண்ணிலிருந்து மட்பாண்டங்களை வனைகிறான். பாண்டங்கள் எதிலிருந்துஉண்டாயின? களிமண்ணிலிருந்து உண்டாயின. அந்தப்பாண்டங்கள் உடைந்துபோனால் என்னவாகின்றன. மண்ணோடு சேர்ந்துவிடுகின்றன. மேகமாகமாறிய நீராவி ஆகாயத்தில் பரவியிருக்கிறது. அதன் மேல் குளிர்ந்த காற்றுபட்டவுடன், அது மழையாகவருஷீக்கிறது. மழையாக வருஷித்த நீர் மீண்டும் என்னவாகிறது சூரிய உஷ்ணத்தினால் நீராவியாகமாறி மறுபடியும் ஆகாயத்திற்பரவி மேகமாகிறது. ஒரே இலக்கணமுடைய ஒரேவஸ்துவின் ஒருபாகத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் என்னமுடிவு பெறப்படுகிறதோ, அதேமுடிவு தான் அவ்விலக்கணமுடைய மற்றவஸ்துக்களைமுழுவதும் பரிசோதித்துப் பார்ப்பினும் உண்டாகும். இவ்வுண்மை தருக்க நூல்முடிபான உண்மையாகும். ஆகவே, விதை, களிமண், நீராவி இம்மூன்றும் மூலகாரணங்கள் என்பதும், இவைகளின் காரியங்கள் முறையே மரமும், பாண்டமும், நீருமாம் என்பதும் கரதலா மலகம்போல் விளங்குவதொன்றாம். காரணத்துக்கும் (Cause) காரியத்துக்கும் (Effect) ஏதாவது வித்தியாசமிருக்கிறதாஆம்; இருக்கிறது. ஆனால் அந்த வித்தியாசம் வெளித்தோற்றத்தில் காணப்படும் வித்தியாசமேயன்றி வேறன்று. குணத்தில்வித்தியாசம் சிறிதும் ஏற்படாது.
களிமண்ணிலிருந்து குயவன் இரண்டு மூன்று குடங்களைவனைகின்றான் என்று வைத்துக் கொள்ளுவோம். களிமண்ணுக்கும் குடத்துக்கும் வித்தியாசமென்ன களிமண் சரியான ஒரு உருவத்தோடு இல்லாமல், மொந்தாகாரமான மண்ணுருண்டையாயிருக்கிறது. குடம் ஒரு உருவத்தை அடைந்திருக்கிறது. இதுதான்வித்தியாசம். ஆனால், மண், குடமானபிறகும் அந்தக் குடம் அக்களிமண்ணின் இலக்கணத்தைக் கொண்டிருக்கிறதேயன்றி வேறில்லை. இதனால் மண்ணும் குடமும் உருவத்தில் மாறுபட்டிருக்கின்றனவே தவிர, குணத்தில் மாறுபடவில்லையென்பது இனிதுபெறப்படவில்லையா? ஆகவே காரணம் என்பது காரியத்தின் சூக்கும் நிலையாமென்பதும், காரியம் என்பது காரணத்தின் ஸ்தூல நிலையாமென்பதும் பெற்றாம். இவ்விதியைப் பிரபஞ்ச உற்பத்திக்கும் வைத்துப்பார்ப்போமானால், காரியப்பட்டிருக்கும் கட்புலனான இந்த ஸ்தூலப்பிரபஞ்சம், கட்புலனாயில்லாது சூக்கும நிலையை அடைந்திருந்த காரண வஸ்துவாகிய சடப்பொருளின்ஸ் தூலநிலைமையே யன்றி வேறன்று என்னு முண்மை இனிது புலப்படும். ''ஒருவஸ்து காரியப்பட்ட பிறகு, அதில் காணப்படுகின்ற உண்மைகளே அவ்வஸ்துவின் காரணநிலையிலும் காணப்படு தல்வேண்டும், - ஆனால் சிற்சில வெளி வேறுபாடுகளுடன்'' என்று அனுமான அளவை பால் பெறப்படும் நியாயத்தைச் சைவசித்தாந்திகளும் சாங்கியமதஸ்தரும் சற்காரியவாதம் என்று கூறுவர்.
இந்தப் பிரபஞ்சங்களைப்பற்றி நமக்கு என்ன தெரிகிறது? பிரபஞ்சங்கள் உயிரற்ற ஸ்தூலவஸ்துக்களால் ஆகிய பெரும் அண்டங்கள் என்று பிரத்தியட்சமாய் அறிந்துவருகின்றோம். பிரபஞ்சங்களில் உள்ள வஸ்துக்கள் சிலவற்றில் மாத்திரம் பிராணசக்தி இயங்கிக்கொண்டிருக்கிறது பிராணசக்தியின் உதவியினால் இயங்கிக்கொண்டிருக்கும். இந்தச் சிற்சில வஸ்துக்கள் கூட பிராணசக்தியின் தொழில் நின்றவுடன் இபக்கமின்றிப்பிராணசக்தியே இல்லாத சடப்பொருட்களைப் போலவே உயிரற்றுப் போகின்றன. இதஉயிரற்ற சடப்பொருளாகிய இந்த ஸ்தூலப் பிரபஞ்சத்தின் மூலகாரணம் உயிரற்ற சடப்பொருளாகிய ஒருசூக்கும வஸ்துவாமென்னும் உண்மை பெறப்பட்டது. ஸ்தூலப்பிரபஞ்ச உற்பத்திக்கு மூலகாரணமாய் அதிசூக்குமமான நிலைமையிலிருக்கும் சடப்பொருளுக்குப்பிரகிருதி மாயை என்று பெயர். பிரகிருதி மாயையை விட அதிநுட்பமாயும் சூக்குமமாயும் இருக்கும் வஸ்துக்கள் பல இருக்கின்றன. அவைகளைப்பற்றிப் பின்னர் பிரஸ்தாபிப்பாம்.
அனுபவ சித்தமாய் நம்முடைய பஞ்சேந்திரியங்களினால் அறியப்படும் அறிவினுக்கு வேறாய், ஒன்றைக் கிரகிக்கும் தன்மை பன  துக்கு இல்லை உருண்டை என்னும் வடிவம் வாஸ்தவத்தில் இல்லையென்றும், மனதில் தோன்றும் ஒருவகை சலத்தினால் உருண்டைஎன்னும் ஒருகுணத்தை மனம் கிரகிக்கின்றதென்றும் கொள்ளுவோமாயின், உருண்டை என்பதைப்பற்றிய அறிவு எல்லோருக்கும் நிகழவேண்டும். உருண்டை என்பது இன்ன இலக்கணத்தோடு கூடிய வடிவம் என்பதை அறியாத ஒருவனிடம் போய், எலுமிச்சம்பழம் என்ன வடிவத்தோடு கூடியது என்று கேட்டால் அவன்பதில் சொல்லுவானா சொல்லமாட்டான். ஏனெனில் முன்பின் உருண்டை வடிவம் இப்படிப்பட்டதென்பதை அறிந்தவனல்லன் பிறவிக்குருடனை யானையின் உருவம் எப்படி யிருக்குமெனக் கேட்டால் அவன் பதில் சொல்லுவானா உருண்டை, வட்டம், சதுரம் என்ற தொடக்கத்து வடிவங்களும், கருமை, வெண்மை, சிவப்புஎன்ற தொடக்கத்து நிறங்களும் மனதின் கண் நிகழும் வெவ்வேறுவகையான சலனங்களின் பயனால் உண்டாகும் தோற்றங்களா யிருந்தால், பிறந்த குழந்தைக்குக்கூட அந்த உண்மை தெரிந்திருத்தல் வேண்டுமன்றே ஏனெனில், குழந்தைகளுக்கும் படனம் இருத்தலினாலென்க. ஆனால் உண்மை அப்படியில்லையே. குழந்தை வளாவளர உலகியல் அறிவும் உடன்வளர்ந்து, வருகிறது. கண்ணால்பார்த்தும், கையால் பரி சித்தும், பிறர் அறிவுறுத்துவது கொண்டும் அது வடிவநிற வேறுபாடுகளை அறிந்து கொள்ளுகிறது. ஆகவே, மனதின் வேறா கவஸ்து இருக்கிறதென்பதும், மன்மும் வஸ்துவும் ஒன்றே தவிர வஸ்து வென்று தனியாக ஒன்று இல்லையென்று கூறுவோர் உரை பொருந்தா தென்பதும் பெறப்பட்டன.
இனி, மாயை என்பது அதிசூக்குமமான அணுத்திரள்களாமென்றும், இவைகளின் சேர்க்கையே கட்புலனாய்த் தோன்றும் இப்பிரபஞ்ச மென்றும் முன்சொன்னோ மல்லவா இந்த மாயைசுத்தமாயை, அ ஈத்தமாயை என்று இரண்டு வகைப்படும். இவை இரண்டும் உயிரற்ற சடப்பொருள்களே. ஆனாலும் அசுத்தமாயையை விடச் சுத்தமாயை அதிக நுட்பமாயும் சூக்குமமாயும் இருக்கும். இறைவனுடைய திருவருட் சத்தியானது, அசுத்தமாயையைக் காட்டினும் சுத்தமாபையில் மிகுந்து தோன்றும். இந்தச் சுத்தமாயையே (Pure and subtle matter) அசேதனப் பிரபஞ்சங்கள் அனைத்திற்கும் மூலகாரணம். இந்தச் சுத்த மாயை சைவசித்தாந்திகள் விந்து தத்துவம் என்று கூறுவார்கள். இதனுடைய வடிவம் புள்ளி (Point) லடிவமாகும். இச்சுத்த மாயையை இறைவனுடைய அருட்சத்தி, உள்ளிருந்து இபக்குகிறது. அப்படி இயக்கும் போது ஓர் ஓசை உண்டாகும். இந்த ஓசையே நாத தத்துவ மெனப்படும். புள்ளி வடிவான விந்து தத்துவத்தை அதாவது சுத்தமாயைபை அதனுட்கலந்து நிற்கும் திருவருட்சத்தி கலக்கும் போது நாததத்துவ முண்டாகும், இந்த நாததத்துவம்வரிவடிவமானது, இப்படி நிகழும் இயக்கத்தால் சுத்தமாயையையின் அணுக்கள் அலை அலையாய் ஒன்றை ஒன்று தாக்கும். அப்படித் தாக்கும் உறழ்ச்சி (Friction) யால் ஒரு நாதம் உண்டாகும்.தயிரை மத்திட்டுக் கடைந்தால் ஒரு விதமான சத்தம் உண்டாவதுடன், அதன்கண் வியாபித்திருக்கும் வெண்ணெய் திரண்டுவருவதை எல்லோரும் பார்த்திருக்கலாம். அது போலவே சுத்தமாயைபின் கீழ் வியாபித்திருக்கும் அதோ மாயை நாததத்துவத்தால் கடையப்படுகிறது. அப்போது அந்த மாயையின் அணுக்களெல்லாம் ஒன்றோடொன்று ஒட்டிப்பிரகிருதி மாயை உண்டாகிறது பிரகிருதி மாயையை விட சூக்குமமான வஸ்துக்கள் இருக்கின்றன என்று முன்பு சொன்னோ மல்லவா அவைகள் சுத்த மாயையும், அசுத்தமாபையுமாம். இந்தப் பிரகிருதி மாயையிலிருந்தே பலவித பேதங்களோடு கூடிய ஸ்தூலப் பிரபஞ்சங்கள் உண்டாபின.
ஆகவே, விந்து என்னும் சுத்தமாயையில் உண்டாகும் நாதமே இப்பிரபஞ்ச சிருஷ்டிக்கு எதுவாம் என்பது பெறப்பட்டது,இனி, இந்த நாதத்தோடு உடன் நிகழும் அக்கினியே இப்பிரபஞ்சத்தை ஒடுங்கிச் சங்காரநிலையில் கொண்டு போய்ச் சேர்ப்பதாகும். இப்படியாகப் பிரபஞ்ச சிருஷ்டி நடை பெறுகின்றது என்னும் உண்மையைச் சிதம்பரத்தில் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ நடராஜமூர்த்தியின் திருவுருவத்தில் காணலாம். ஸ்ரீநடராஜப் பெருமானுடைய ஒரு திருக்கரத்தில் இருக்கும் வட்டமான டமருகத்தின் வாயே சுத்தமாபையாம். அந்த டமருகத்தில் பெருமான் தமது திருவிரல்களை வைத்திருப்பது, சுத்தமாயையைக் கலக்கும் திருவருட் சத்தியைக் குறிப்பிடுகிறது. டம்ருகத்தில் நடராஜரின் விரல்கள் பட்டமாத்திரத்தில் உண்டாகும்நாதமே பிரபஞ்ச சிருஷ்டிக்கு ஏதுவான நாததத்துவமாம். பெருமான் ஒரு கரத்தை அமர்த்துங் குறிப்புத்தோன்ற வைத்திருப்பது சிருஷ்டிக்கப்பட்ட பிரபஞ்சம் சிறிது காலம் நிலைத்திருக்குமென்பதைக் குறிப்பிடுகிறது. இறைவனின் மற்றொருகரத்தில் இருக்கும் அக்கினியே பிரபஞ்சங்களைச் சங்கரிக்கும் அக்கினி தத்துவமாம், இங்ஙனம் பிரபஞ்ச சிருஷ்டி நடைபெறுகிற தென்பதை ஸ்ரீமத்குமரகுருபர சுவாமிகள் பின்வருமாறு கூறி, நமக்கு உண்மை புலப்படுத்தியிருக்கிறார்கள்.
பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்
நாம நீர் வரைப்பின் நானில வளாகமும்
ஏனைய புவனமும் எண்ணீ ங் குயிருந்
தானே வகுத்ததுன் தமருகக் கரமே
தனித்தனி வகுத்த சராசரப் பகுதி
யனைத்தையுங் காப்பதுன் னமைத்த கைத்தலமே
தோற்றுபு நின்றவத் தொல்லுல கடங்சலு
மாற்றுவ தாரழ லமைத்ததோர் கரமே
ஈட்டிய வினைப்பய னெவற்றையு மறைத்து நின்
றூட்டுவதாகு நின்னூன்றிய பதமே
அடுத்த வின்னுயிர்கட் களவில் பேரின்பங்
கொடுப்பது முதல்வ நின் குஞ்சித பதமே.

நாகை - வி - கோபால கிருஷ்ணன்.
சித்தாந்தம் – 1914 ௵ - ஏப்ரல் ௴



No comments:

Post a Comment