உ
சிவமயம்.
திருச்சிற்றம்பலம்
அறிவும்
சமயக் கல்வியும்.
மன் குலத்தார் சன்மார்க்க சீவர்களாய்
விளங்குவதற்கு அன்னாருக்குச் சமயக்கல்வி அவசியமென்றும் அக்கல்வி யெவ்வித
ஒழுங்குடையதாயிருக்க வேண்டுமென்றும் அறிஞர் பலர் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
இவ்விஷயமாய்ச் சில அபிப்பிராயங்களை வெளியிடில், அவைகளையும் அறிஞர் சிந்தையிற் கொண்டு
ஆராய்ந்து லோகோபகாரம் புரிவார்கள் என்ற நம்பிக்கையினால் இவ்லியாசத்தை
எழுதலாயினேன். ஆதலால் அறிஞர் இதை மாறுபடு தர்க்கம்'
தொடுப்பதற்காக எழுதப்பட்டதென்று
எண்ணாமல், நல்லெண்ணத்துடன்
எழுதப்பட்டதென்றே மதித்துக் குற்றங்களைந்து குணங்களைக் கொள்ளும்படி
வேண்டுகின்றேன்.
இயற்கையறிவு,
செயற்கையறிவு என அறிவு
இருதிறப்படும். மனித ஆன்மா பரமார்த்த நிலை எய்துவதற்கு இயற்கை அறிவே பெரிதும் வேண்
டப்படுவது. செயற்கையறிவு இயற்கை அறிவைத் தீவிரப்படுத்திப் பிர்காச் மாக்குவதற்கு
உபகரணமாயிருக்குமேயன்றி, அது
தன்னளவில் ஜீவாத்து மாவை ஈடேற்றுவதற்கு நேரான காரணமாவதில்லை. இயற்கையறிவைக்
கிளர்த்தி விகாசமுறப் பண்ணுவதற்காகவே கல்வியறிவு வேண்டப்படுகின்றது.
நமக்குச் சிறுபிராயத்திற் போதிக்கப்பட்ட ஓர்
விஷயம், நாம்
பகுத்துணருஞ் சக்திவாய்ந்தபின் தவறாய்த் தோற்றினால்,
அதில் நம்பிக்கை தானே நழுவி
விடுகின்றது. இது இயற்கையறிவைச் சாதிப்பதால் நேர்வது. சிறு பிராயத்தில்
போதிக்கப்படுங் கல்வி, யுத்தி
உபமானம் அனுமானம் முதலிய மனோதத்துவங்களின் ஆராய்ச்சிக்கும், அனுபவத்துக்கும் மாறுபடாத
கல்வியாயிருக்க வேண்டும். மனிதர் சன்மார்க்கர்களாய் அல்லது ஆஸ்திக சித்தர்களாய்
விளங்க வேண்டுமென்று போதிக்கப்படுஞ் சமயக்கல்வியும்,
அறிவு ஏறிய பின்பும் யுக்தி
அனுபவங்களுக்கு முரண்படாததாயிருத்த லவசியம். வெளியாய்க் கூறுகில் ஊனக்கண்கொண்டு
பார்க்க முடியாமலும் ஞானக்கண் கொண்டே பார்க்க வேண்டியு மிருக்கின்ற கடவுள்
விஷயமாய்ப் போதிக்கப்படுங் கல்வி கடவுளைப் பற்றிய தத்துவஞானத்தைத் தழுவிய வளவிலேயே
யமைந்திருக்க வேண்டும். சிறப்பு விதியாய் அவரவரின் மனோபரிபக்குவத்திற்கேற்ற
ஆஸ்திகக் கல்வி சிலருக்கு வேண்டியதாயிருக்கவும் கூடும். ஆனால் பொதுவான
வித்தியாலயங்களில் அவ் வித கல்வி போதிக்கப்படுதல் கஷ்டசாத்தியம். ஆதலால் சில
பொதுவான மூலதாரக் கொள்கைகளைப் பலவிதமான மனோநிலைமைகளுக்கும் கூடியவரையில்
பொருந்தும்படி சாவதானமாய்ப் பொருத்தின ஆஸ்திகக் கல்விமுறை யாவர்க்கும் பயன்
படக்கூடிய தாகவே யிருக்கும்.
மதவிஷயமாய் மூட பத்தியான கொள்கைகளைப்
போதித்தலால் தீமை விளையும். (எக் கொள்கை மூட பத்தியான தென்று தீர்மானிப்பது வேறு
விஷயம்) உதாரணமாக : ஒருவனுக்குச் சிறுபிராயத்தி லிருந்தே "கடவுள் ஒருவர்
இருக்கிறார்; அவருக்கு
ஒருவன் வருஷாந்தம் நூறு ஆட்டுக்கடாப் பலியிட்டுவந்தால் பத்தாவது வருஷத்தில் கடவுள்
பிரசன்னமாவார்'' என்று
போதிக்கப்பட்டதாக வைத்துக்கொள்வோம். இதை விசுவாசித்து அவ்விதம் நடந்தவனுக்குப்
பத்தாவது வருஷத்தில் அப்போ தனையினாலுண்டான விசுவாசங் கெட்டுவிடுகின்றது. இவ்விதமான
சம்பவங்கள் பல. தான் போதிக்கப்பட்டு விசுவாசித்திருந்த கொள்கைகளுக்கு மாறாய்
நேரும்போது, கடவுளைப்பற்றிய
விசுவாசமே சிறிது சிறிதாய்த் தானே நழுவிவிடுகின்றது. தத்துவஞான உண்மைகளைத் தானே
யுணருஞ் சத்தியும் அவனிடத்தில்லா திருக்கின், அவன் வெளியரங்கத்தில் எவ்விதம் நடிப்பினும், அந்தரங்கத்தில் நாஸ்திகனாகவே
யிருப்பான். இவ்விதம் நாஸ் திகனாகியவனுக்கு அக்காலத்திலே மூடபத்தியை உண்டுபண்ணாமல், கடவு ளைப்பற்றிய லட்சணங்களைத்
தக்கபடி போதித்திருந்தால் அவன் ஆஸ்திக சித்தமுடையவனாகவே யிருந்திருப்பான். ஆதலால்
நல்லதோ, தீயதோ
ஒருமதக்கல்வியை ஒருவனுக்குப்போதித்து விடுவதனாலேயே ஒருவன் ஆஸ்திகனாயும்
சன்மார்க்கனாயும் ஆகிவிடுவதில்லை. தப்பான ஆஸ்திகக் கல்வியைப் போதிப்பதினும் சாவதான
மாய் நிர்மானிக்கப்பட்ட பொதுவான - ஒரு ஆஸ்திகக் கல்வி நன்மையைப் பயக்கும்.
சமயக் கல்வி போதிக்கப்படுவதாலேயே
மனிதரெல்லாம் சன்மார்க் கர்களாய் விடுவார்களென்ற கொள்கை, இன்னும் சரியாய் அனுசரிப்பின்
மேல் அறிந்து தீர்மானிக்கவேண்டிய விஷயங்களிலொன்றாகவே யிருக்கின் மது. ஏனெனில், பரோபகாரம், கருணை, தன்னலமறுப்பு முதலிய உயர்ந்த
மனோபாவங்களுள்ள சன்மார்க்கர்களாகிய நாஸ்திகச் சார்புடையோர் சில் ரையும், சன சமூகத்திற்கே தீமை புரியும்
இழிந்த குணங்களும், தன்னல
முள்ள ஆஸ்திக சித்தமுடையோர் பலரையும், நாம் நுணுகி யாராய்ந்தால் இவ்வுலகிற்
காணலாம். முற்கூறப்பட்டவர்கள் பெரும்பாலும் நவீன நாக ரிகக்கல்வி யுடையோரிலேயே
காணப்படுவர். ஆகவே மேனாட்டாரிலேயே பெரும்பாலாருளர். இவர்களுக்கு இந்து
சமயத்திலுள்ள மேலான தத்துவ ஞானங்களைச் சரியானபடி யுணர்த்தினால், வேதாந்திகளாய் விளங்கு வார்க
ளென்பதற்குச் சந்தேகமில்லை.
இனி, ஒருவன் நிலையான ஆஸ்திக சித்தமின்றி
யிருப்பதினும் எவ்வகை யதாயினும் ஒருமதத்தைத் தழுவியே யிருத்தல்வேண்டு மென்று
விதித்தலுஞ் சிலசமயத்தில் தீமையையே விளைக்கும். ஜீவகாருண்ணியத்திற்கு மாறுபட்ட
கொள்கைகளை மூலாதாரமாகக் கொண்ட மதங்களை அனுசரித்து அதுகாரணமாய் மனோபரிபக்குவ
விருத்தி தடைபட்டு அதோமுகப்படுவதினும், சிறிது நிதானித்துத் தன் போத அறிவு திருப்தி
கொண்ட ஓர் மதத்தைத் தழுவுதல் அபாயகரமன்று, உயிர்களை வதைத்துப் புசித்தல், தன் மதத்தைத் தழுவாதவர்களை
ஹிம்சித்தல் முதலிய பொது நீதிகளுக்கு மாறான கொள்கைகளையுடைய மதங்களை யனுசரித்துப்
பிறவுயிர்களுக்கு இடுக்கண் வருவிப்பதினும் சிறிது தாழ்ந்ததேனும் ஓர்மதத்தில்
நிலையுறுதல் உத்தமமன்றோ? மனிதரின்
ஈடேற்றத்திற்கு விதியும், விலக்குமென
இரண்டு வேண்டப்படுகின்றன. விதியிற் றவறுதலினும்,
விலக்கைச் செய்வதனால் பாவகன்மம்
அதிகப்படும். ஆதலால் சாதாரண நிலையில் ஒருவன் விலக்கையே பிரதமத்தில்
கவனிக்கவேண்டியவனாகிறான். தற்காலத்துள்ள சமயங்களில் விலக்கை, விதியாய்க் கொண்ட சமயங்களிருக்கின்றனவா
வென்று ஆராய்தற்கு ஈங்கு அவசரமில்லை. ஆனால் அவ்விதமான சமயங்களிருக்கின்றன; அல்லது இருக்கக்கூடும், என்பதற்குப் பின் வரலாற்றைக்
காண்க:
ஓர்காணாத் தீவில் அநாகரிகமுள்ள சனங்கள்
மூடபத்தியினால் நரபலி யிடுதல் முதலிய பாவச்செய்கைகளை மதா நுசாரமாய்க் கொண்டிருக்கிறார்
களென்று வைத்துக்கொள்வோம். இவர்கள் மோட்சத்திற்கு முக்கிய சாதனமாயுள்ள
ஜீவகாருண்ணியம் ஞானம் என்பவைக்குப் பதிலாக, ஜீவ ஹிம்சை அஞ்ஞானம் ஆதியவற்றையே
கடைப்பிடிக்கிறார்கள். ஆகவே, அம்மதத்திற் பிறந்த சிலர் அறிவு
விருத்தியுற்ற பின் தாம் அனுஷ்டிக்கும் மதம் தப்பானதென்று விலகி, அதிலும் மேம்பட்ட ஓர் மதத்தைத்
தழுவுதல் தவறாகுமா? எல்லாம்
பிரமத்தின் செயலேயாதலால் அம்மூடபத்தி மதத்தில் ஒருவனைப் பிறப்பித்ததும்
தெய்வமேயென்றும், ஆதலால்
அதன் மனச்சாட்சிக்கும் யுக்தி நியாயங்களுக்கும் பொருந்தாததேயாயினும் அம் மதத்தையே
யனுசரிக்க வேண்டுமென்றும் வாதித்தல் யுக்தமாய்த் தோற்றவில்லை. வனத்தில் வசித்துக்
கொலைகளவே தொழிலாய்க் கொண்ட ஒருவ னுக்கு மகனாய்ப் பிறந்ததனாலேயே, ஒருவன் கொலைகளவு செய்ய வேண்டு
மென்று ஈசுவரசங்கற்ப மிருக்க வில்லை. கடவுள் நமக்கு அறிவை கிளரப் பண்ணுவதெல்லாம்
அவ்வறிவை உபயோகித்து நல்விருத்தி மார்க்கமுறுதற்கே.
இஃதிங்ஙனமாக,
இக்காலத்திற் சிலர் மனிதர்க்குள்
சுவதந்திர எண்ணம் என்று ஒன்று புதிதாய் முளைத்திருப்பதாகவும் அதனால் மன்
குலத்தார்க்கே ஆபத்துக்கள் விளையப்போவதாகவும், பொய்த்தோற்றங் கண்டு அஞ்சுகின்றனர்.
சுவதந்திர எண்ணம் ஒருகாலமும் மனிதனைப் பந்தத்துக்குட் கொண்டுவிடாது. இதற்கு மாறாய்
அவனை விருத்திக்கிரமமாய் மோட்சத்திற்கே கொண்டு செல்லு மென்பது நமது சாஸ்திரங்களின்
துணிபு. நம்மிடத்திற் கிளரும் அறிவை யுபயோகித்து ஆராய்ச்சி செய்யச்செய்ய, இவ்வுலக விஷயங்களின் மெய் பொய்
இன்பதுன்பங்களையும், தத்துவ
உண்மைகளையுமே அறிகிறோம். ஆகவே ஈசுவரனின் அபாரமகிமைகளையே உணர்வதற்கும்
நிவிர்த்திமார்க்கத்தைத் தேடுவதற்கும் அது சாதகமாகவே ஏற்படுகிறது. ஒருவேளை அவனது
மனதில், தனது
பூரண முறாத ஆராய்ச்சியின் பயனாய், ஒரு சகுணமுள்ள கடவுள் இருத்தல்
சாத்தியமன்றெனவும், சிருஷ்டி
திதி சங்காரங்கள், இயற்கை
(nature) என்ற
தத்துவத்தின்படி நடைபெறுகின்றன வென்றும், மேகத்தினிடையில் மின்னல் தோன்றி மறைவதுபோல
ஓர்வித நாஸ்திக எண்ணம் எழக்கூடும். ஆனால் அவ்வெண்ணம் நிலையுறக் கூடிய தன்று. ''மனங்குவிந் துரைமாளுதல்
பந்தத்திற்கு ஏதுவென்றும், மனம்
விரிந்துரை மாளுதல் மோட்சத்திற்கு ஏதுவென்றும் நமது பெரியோர் கூறியிருப்பதின்
தத்துவ உண்மையும் மேலே கூறப்பட்டவைகளை வலியுறுத்தும்.
இனி, ஸ்ரீமந் மாணிக்கவாசப் பெருமானே'தெய்வ மென்பதோர் சித்ததுண்டாகி”
மத ஆராய்ச்சி செய்யத் தலைப்பட்டா ரென்றால் எம் போல்வார் அறிவில் மயங்குதல்
அதிசயமன்று. முன் கூறப்பட்ட சுவதந்திர எண்ணத்திற்கு நெருங்கிய படியில் “தன்னிஷ்ட
எண்ணம்" என ஒன்றும் மனிதனுக்கிருக்கின்றது. அது தான் மனம் போனபடி தீய எண்
ணங்களையுஞ் சங்கற்பிப்பது. பிறர் கேடுறினும் தானின்புற விரும்புதல், நல்தன்னின் மேம்பட்டானொருவனைப்
பொறாமையால் தனக்குக் கீழ்ப்படியிலுள்ள வனாக்கி வைக்கக் கருதிச் சதியுபாயங்களை
மனதிற் சங்கற் பித்தல், ஆகிய
இவைபோல்வன தன்னிஷ்ட எண்ணத்தின் பாற்பட்டவை. இவைகளே அடக்கப்பட வேண்டியவை.
மேலும், அறிவில் விருத்தியடைவோர்க்கோ ஆசங்கைகளும்
நிகழ்தல் சகஜமே. இவ்வாசங்கைகளைத் தீர்த்துக்கொள்ளாமல் மனதிற்பொதிந்து மூடுவதால்
அநேகருக்குத் தீமையே விளையும் ஆனால், அறிவில் மேம்பட்டோர் அவ்வாசங்கைகளை உடனே
தீர்த்துக்கொள்ளத் தருணமின்றி யிருப்பினும், அதனால் தமது பொதுநிலையில் ஒருவித மாறுபாடும்
ஏற்படாவண்ணம் அவ்வரசங்கைகளை ஒதுக்கி வைத்திருந்து காலாந்தரத்தில்
தீர்த்துக்கொள்வார்கள். எம்பெருமான் தாயுமானவரே பின் வருமாறு ஓர்காலத்தில்
ஆசங்கித்தா ரென்றால் நம்போல்வாரது மனதில் ஆசங்கை நிகழ்தல் தவறாகுமா?
அம்மகான்,
இன்றோ விருவினை வந்தேறியது; நானென்றோ அன்றே விளைந்த தன்றோ; ஆற்றேன் பராபரமே..
எண்ணமுந்தா னின்னைவிட்டு இல்லை யென்றால் யான்
முனமே, பண்ணவினையேது; பகராய் பராபரமே.
என்னை யின்னதென் றறியா ஏழைக்கு மாகெடுவேன், முன்னை வினை கூடல் முறையோ? பராபரமே.
அறியா நான் செய்வினையை ஐயா கூட்டுங், குறியே தெனக்குளவு கூறாய்
பராபரமே.
என்னைக் கெடுக்க இசைந்த இருவினை நோய், தன்னைக் கெடுக்கத் தகாதோ பராபரமே.
வல்லமையே காட்டுகின்ற மாமாயை நானொருவன், இல்லையெனி லெங்கே இருக்கும்
பராபரமே.
என்று பிரலாபித்திருக்கின்றார்.
பல ஜன்மங்களில் உலக இன்ப துன்பங்களால் அடியுண்டு
அலுத்து ஒன்றிலும் நிலையான இன்பத்தைக் காணாமல் உபசாந்தியை அவாவி நிற்பவனே இவ்வித
ஆராய்ச்சியால் உறைத்து நிற்பான். இதுவே அவன் ஊர்த்துவகதி நோக்கி விட்டானென்பதைக்
குறிக்கும்.
ஞானாகாசம்.
சித்தாந்தம் – 1916 ௵ - அக்டோபர் ௴
No comments:
Post a Comment