அறுவகைச் சமயம்
இம்மதத்தினரின் கொள்கை இத்தகையதென்பது,
பரமேது வினை செயும் பயனேது பதியேது பசுவேது பாசமேது
பத்தியே தடைகின்ற முத்தியேதருளேது பாவபுண்ணியங்களேது
வரமேது தவமேது விரதமேது ஒன்றுமிலை மனம் விரும்புணவுண்டுநல்
வத்திரமணிந்து மடமாதர்தமை நாடீநறு மலர் சூடி விளையாடிமேற்
கரமேவவிட்டு முலைதொட்டு வாழ்ந்தவரொடு கலந்து மகிழ்கின்ற சுகமே
கண்கண்ட சுகமிதேகைகண்ட பலனெனுங்கயவரைக் கூடாதருள்
தரமேவு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்தலமோங்குகந்தவேளே
தண்முகத்துய்யமணியுண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே"
என்னும் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளின் அருமைத்
திருவாக்கால் இனிது புலப்படுகிறதன்றோ? இத்திருவாக்கில் உலகாயத மதத்தினர்களின்
கொள்கை கூறப்பட்டிருத்தலோடு, அவர்களுடைய கூட்டுறவு கூடாதென்று
வற்புறுத்தப்பட் டிருப்பதையும் காண்க.
''உலோகாயதனெனுமொண்டிறற்பாம்பின்
கலா
பேதத்தகடுவிட மெய்தி
யதிற்பெருமாயையெனைப்பல சூழவும்.''
என்று ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்
திருவாய்மலர்ந்தருளியிருக்கும் பாசுரத்தில் உலகாயதமதத்தை பாம்பிற்கு
ஒப்பிட்டிருப்பதானது அம்மதத்தின் தாழ்வையும், அம்மதக்கொள்கைகளால் விளையும் தீமையையும்
சூசிப்பிக்கிறது.
இவ்வுலகாயத மதத்தினர்; தேகான்மவாதிகள், இந்திரியான்மவாதிகள், பிராணான்மவாதிகள், அந்தக்காண ஆன்மவாதிகள் எனப்
பலவகைப்படுவர்.
தேகத்தின் வேறாய் ஆன்டா வேறு உண்டென்று
கொள்வதற்கு, உடம்பின்
கண்ணன்றி அறிவு நிகழக்காணாமையானும், "நான் அறிந்தேன்'' “நான்
பருத்தேன்” “நான்
சிறுத்தேன்'' என்னும்
பிரயோகங்களில் “நான்'' என்னும் பதம்
உடம்பினையே உணர்த்துதலானும், பிரத்தியக்ஷப் பிரமாணத்தைத் தவிர வேறு
பிரமாணங்கள் கொள்ளற்பாலன வல்லவா தலாலும் 'தேகமே பிரமம்''
என்று தேகான்மவாதிகள்
கூறுவார்கள்.
"தேகமே
பிர்மம்'' என்று
கூறுவதை மறுத்து "இந்திரியங்களே பிர்மம்'' என்று
வாதிப்பது "இந்திரியான்ம வாதிகள்'' கொள்கையாகும். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பஞ்சேந்திரியங்களின்
வழியாயன்றி அறிவு நிகழக் காணாமையானும், இந்த ஐந்து இந்திரியங்களும் முறையே
விஷயங்களைப் பரிசித்தும், ருசித்தும், கண்டும், முகர்ந்தும், கேட்டும் தனித்தனி அறியும்
ஆற்றலுடையவைகளாய் இருக்கின்றமையானும் “ இந்திரியங்களே பிர்மம்'' என்று
இவர்கள் காரணங்கூறுவார்கள். இந்திரியங்களிருந்தும்,
பிராணவாயு அடங்கி நடக்கும் உறக்கத்தில்
இந்திரியங்களுக்கு அறியும் சக்தி இன்மையானும், பிராணவாயு விரிந்து செல்லும் சாத்திரத்திலேயே
அவை அறிகின்றமையானும் "இந்திரியங்கள்
பிரமமாகாது, பிராணனே
பிரமம்'' என்று
கூறுவது ''பிராணான்ம
வாதிகள்'' கொள்கையாகும்.
பிராணன் இயங்கிக்கொண் டிருந்தபோதிலும்
அயர்ந்து நித்திரையில் அறிவு நிகழப்பெறாமைக்குக் காரணம், அதனோடு உடன் சேர்ந்தறிவதாகிய
கருவிகள் இன்மையேயாதலால் பிராணனுக்கு வேறாயுள்ள மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் “அந்தக்கரணங்களே
பிரமம்'' என்று “அந்தக்கரண ஆன்மவாதிகள்'' தங்கொள்கை
சாதிப்பார்கள்.
''என் உடம்பு என்கை'' என்று மக்கள்
வழங்குகின்றார் களேயன்றி ''நான்
உடம்பு" "நான்கை'' என்று
வழங்குகின்றார்களில்லை யாதலாலும், நிலம் நீர் அனல் கால் என்னும் நான்கு
பூதங்களும் சடப்பொருளாதலால் அவற்றின் கூட்டுறவாகிய தேகமும் சடப்பொருளேயாம் என்பது
இனிது பெறப்படு தலாலும், பாக்கும்
வெற்றிலையும் சுண்ணமும் சேரும்போது பாக்கினிடத்தில் முன் மறைந்திருந்த செந்திறம்
வெளிப்பட்டுத் தோன்றுகிறதேயன்றிப் புதுவதாக வந்து சேரவில்லை என்னும் உண்மை,'' இல்லாத ஓர்
பொருளிலிருந்து உள்ளதோர் பொருள் திடீரென்று தோன்றாது; உள்ளதோர் பொருள் திடீரென்று
சூன்யமாய்ப் போகாது'' என்னும்
தருக்கநெறி அறிந்தார்க்கு ஒப்பமுடிந்தமையின் சடப்பொருள்களான நாற்பூதக்
கூட்டுறவிலிருந்து சித்துப் பொருளான ஆன்மா தோன்றுமென்று கூறுதல் வழுவாமாதலாலும் 'தேகமே பிரமம்'' என்று
கூறுவது பொருந்தாது என்று சைவசித்தாந்தம் கூறி, " தேகான்டவாதி'களை மறுத்து''
உடம்பின் வேறாய் உயிர் உண்டு' என்னும் உண்மையை நிலைநாட்டுகிறது.
மேலும், தேகமே
ஆன்மாவானால் இறந்துபோன சரீரத்திலும் நாற்பூதக் கூட்டுறவு கெடாதிருப்பதால், பிணத்திற்கும் அறிவு நிகழ
வேண்டுமன்றே? ஆனால்
அங்ஙனம் நிகழாமையால் தேகத்திற்கு வேறாய் உயிர் உண்டு என்பது துணியப்படும். இவ்
வுண்மை,
''உடலின் வேறுயிரேன்? இந்தவுடலன் றோவுணர்வதென்னில்
உடல்சவமானபோதும் உடலினுக்குணர்வுண்டோதான்
உடலினில் வாயுப்போனால் உணர்ச்சியின்றுடலுக்கென்னில்
உடலினில்வாயுப்போகா துறக்கத்துமுணர்வதின்றே.''
என்னும் சிவஞானசித்தித் திருவாக்கல்
வலியுறுத்தப்படுகிறது.
இங்ஙனமே, இந்திரியான்ம வாதமும், பிராணான்ம வாதமும், அந்தக்கரணான்மவாதமும் முறையே,
''அறிவந்தம்பொறியேயென்னில்
உறக்கத்தில் அறியாவாகும்
அறிவதுமொன்றொன்றாக ஒன்றொன்றாயறிவதென்னில்
அறிவுகள் ஒன்றை ஒன்றங்கு அறிந்திடா
ஐந்தையுங்கொண்டு
அறிவது ஒன்றுண்டு அது ஆன்டடா, ஐம்பொறி அறிந்திடாவே."
"அறிந்திடும்பிராணவாயு
அடங்குதல்விடுதல் செய்தால்
அறிந்திடாதுடல், உறக்கத்தறிவின்மை கரணமின்மை
அறிந்திடு முதலியாகினது நிற்கக் கரணம் போகாது
அறிந்திடும்பிராணன்றன்னை அடக்கியும் விட்டும்
ஆன்மா.''
''உணர்வனகரணமென்னில்
ஒன்றையொன்றுணராவெவ்வேறு
அணை தருஞ்செயல்கள் நான்கும்
அறிந்தவையடக்கியாக்கிப்
புணருமுட்கரணமாக்கிப் புறக்கருவியினும்
போக்கி
இணை தருமிவற்றின் வேறா யானெனதென்பதான்மா.''
என்னுந் திருவாக்குகளால் மறுக்கப்படுதல்
காண்க.
இனி, இவ்வுலகாயத மதத்தினர் கூறும் நாற்பூதக்
கூட்டுறவினால் பிறப்பதே ஆன்மா'' என்னும் கூற்றை மறுப்பதற்கு அவர்களுடைய உவமானமே
சித்தாந்திகளுக்குப் போதிய கருவியாய் அமைவது விந்தையிலும் விந்தையாம், சுண்ணாம்பும் வெற்றிலையும்
பாக்கும் சேர்ந்தவழி செந்நிறம் பிறத்தல் போல், நிலந்தீயனல் காலாதிய நாற்பூதங்களும்
சேர்ந்தவழி உண்டாவதே ஆன்மா என்பது இவர்கள் காட்டும் உவமானமாகும். பாக்கில் இயல்பாகவே
மறைந்துள்ள செந்நிறம் சுண்ணமும் வெற்றிலையும் கூடிய வழி புலப்பட்டுத் தோன்றுகிறது.
அது போலவே நாற்பூதங்கள் சேர்ந்தவழி அவற்றில் மறைந்துள்ள குணப்பொருள் புலப்பட்டுத்
தோன்றுமென்றல் பொருந்துமே ஒழிய புதுவதான குணிப்பொருள் தோன்றுமென்றால் பொருந்தாது.
மேலும், சடப்பொருளான
நாற்பூதங்களிலிருந்து சித்துப்பொருளான ஆன்மா தோன்றுமென்றல் எவ்வாற்றானும்
பொருந்தாது. ஆகவே, சடப்பொருள்களான
நாற்பூதங்களின் வேறாய்ச் சித்துப்பொருளான ஆன்மா என்பது ஒன்றுண்டு. இவ்விதம்
சித்தாந்தம் ஆன்மாவின் இருப்பை ஸ்தாபித்தலோடு, பாக்கையும் வெற்றிலையையும் சுண்ணத்தையும்
ஒன்று சேர்த்தற்கு ஒருவன் வேண்டப் படுதல் போல, சடப்பொருளான நாற்பூதங்களை ஒன்று சேர்த்து
உடம்பாக்குதற்கு ஒருகர்த்தா வேண்டும் என்று கூறி,
ஆன்மாவின் வேறாய்ப் பதிபொருள்
ஒன்றுண்டு என்னும் உண்மையையும் புலப்படுத்துகிறது. இவ்விஷயத்தை இன்னும்
விரிப்பிற்பெருகும்.
பௌத்தமதத்தை ஸ்தாபித்தவர் கௌதமசாக்கிய
முனிவர் இது புறப்புறச் சமயத்தின் பாற்பாடும். பௌத்தசமயத்தின் பிரிவுகளான
மாத்தியமிகம், யோகாசாரம், சௌத்திராந்திகம், வைபாடிகம் என்னும் நான்கு
சமயங்களையும், ஆருகத
சமயத்தையும் ஒருங்குகூட்டி 'பௌத்தமதம்''
என்று இங்கு சௌகரியத்திற்காக
வழங்குதல் இழுக்காகாது, "மூலகாரணத்தைக்கண்டு
பிடிப்பது எவருக்கும் சாத்தியமாகாத விஷயம். வாழ்க்கை துன்பத்திற்கு ஏதுவாயுள்ளது'' என்னும் கொள்கையே பௌத்தசமயத்தின் முக்கிய
போதனையாகும்.
“பிறந்தோருறுவது பெருகியதுன்பம்
பிறவாரு றுவது பெரும்பேரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக''
என்னும் மணிமேகலை அடிகளானும் இவ்வுண்மை
தெளியப்படும், பௌத்தருள், மாத்தியமிகர் என்னும் பிரிவினர் ''உலகத்துப்பொருள் உள்பொருளாயின்
அழியாது; இல்பொருளாயின்
தோன்றாது; உள்ளவுமில்லவுமாமெனின்
முரணும்; இரண்டுமல்ல
வெனின் உணர்ச்சி கூடா, ஆதலால் எல்லாப்பொருளும் வெறும் சூனியமே, மயக்கத்தால் உள்பொருள் போலத்
தோன்றுகிறது” என்று கூறி உலகமும் மற்றைப் பொருள்களும் சூனியம் எனவாதிப்பார்கள்.
ஆதலால் சூனியவாதிகள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவார்கள். ஆன்மவிசாரனை செய்யத்
தொடங்கி உடற்கருவிகள் பலவற்றையும் “ இது ஆன்மா அன்று இது ஆன்மாவன்று' என்று சோதனை செய்துகொண்டே
போகுங்கால், கடைசியில்
சூன்யம் தலைப்படுகிறதாதலால் எல்லாம் சூனியமே என்பது இவர் கொள்கையாகும். ஆனால், " இது
அன்று'' “ இது
வன்று” என்று சோதனைசெய்து கொண்டு போகும் வியாபாரத் தினைச் செய்யும் அறிவே
ஆன்மாவாகும் என்று கூறிச் சைவ சித்தாந்தம் இவர்களை மறுக்கிறது.
இனி, யோகசாரார் என்பார்'' யாவையும்
சூனியம்” என்னும் சூனியவா திகளை மறுத்து “ஞானமாத்திரம் உள்ளது; அதுவே ஆன்மா'' என்று
கூறுவார்கள். சௌத்திராந்திகர்கள் இவர்களை மறுத்து''
ஞானம் மாத்திரம் உள்பொருள் என்றல்
பொருந்தாது, புறப்பொருளும்
உள்பொருளேயாகும், ‘ நான்
இது கண்டேன்'' நான்
இது அறிந்தேன்' என்று
சுட்டியறியப்படுதலே இதற்குச் சான்றாகும். ஆனால் புறப்பொருள்கள் உள் பொருளாயினும்
அவை காட்சி பொருளல்ல, குடத்தைக்
கண்டபிறகு குடவடிவாகிய ஞானம் என்றும் இருக்கிறது. ஆனால் குடம் அழிந்துவிடுகிறது.
ஆதலால் புறத்துப் பொருள் காட்சியளவையால் உணரப்படமாட்டா; வழியளவையான் உணரப்படும்” என
வாதிப்பார்கள்,“ புறப்பொருள்
காட்சியளவையால் உணரப்படாமல் ஞானத்தால்
அநுமித்தறியப்படும் என்று கூறுதல் பொருந்தாது. ஞானமே காட்சிப்பொருளாதலால், அதனைத்தவிர வேறு காட்சிப்பொருள்
இன்றாயின் உடனிகழும் உணர்வு ஏற்படாது. அது ஏற்படாமல் வழியளவையால் அறியமுடியாது.
ஆதலால்புறப்பொருள் பிரத்தியட்சப் பிரமாணத்தாலும் அறியப்படும்" என்று
கூறிவைபாடிகர்கள் சௌத்திராந்திகரை மறுப்பார்கள்.
இனி, ஆருகதமதத்தினர்; உலகாயதர், நான்கு பிரிவினரான பௌத்தர்
இவர்களைப்போல் சித்துப்பொருளான ஜீவன் என்பது ஒன்று இல்லை என்று கூறாமல் ‘ ஜீவன்
உண்டு'என்று
சொல்லும் கொள்கையினர். இவர்களாற் கொள்ளப்படும் பதார்த்த ங்கள் (1) சீவன் (2) அசீவன் (3) ஆச்சிரவம் (4) சமுவரம் (5) நீர்ச்ச ரம்
(6) பந்தம்
(7) வீடு
என ஏழு. இவற்றுள் சீவன் அநாதிசித்தன், முத்தன், பெத்தன் என்று முத்திரப்படும். அநாதிசித்தன், அருகக்கடவுளாவார். மோகம் முதலிய
பந்தத்தினின்று நீங்கிய சீவன், முத்தன் எனப்படும். பந்தத்தில் கட்டுண்டு
கிடக்கும் சிவன், பெத்தன்
எனப்படும். நிலம் முதலிய நான்கு பூகங்களும், புல்மரம்முதலிய நிலையியற்பொரு ளும் பிறவும்
அசீவன் எனப்படும், இவற்றிற்குக்
காரணம் பர மாணுக்கள். ஆச்சிரவமாவது பொறிவழிச்சேரலும் கன்மத்தொ டர்ச்சியுமாம்.
சமுவரமாவது முத்திக்குக் காரணமாவது. ஜீவர்களை வதைசெய்யா திருத்தல், இனியவை கூறல், நியமவுண வுமுதலியன சமுவரமாகும், நிரச்சரமாவது தவம்புரிதல், பந்தமாவது பிறப்பிறப்பிற்குக்
காரணமான மோகம் முதலிய எண்குணங்கள். வீடாவது பந்தநீக்கம் பெற்று மேலே ஆகாயத் தை
நோக்கி சீவன்செல்லல். இதுவேமுத்தி. இத்தகைய கொள்கைகள் ஆருகதமதத்தினரின்
கொள்கைகளாகும்.
இனி, பௌத்தமதம் ‘கடவுள் ஒருவர் உண்டு' என்னும் கொள்கையுடைய தன்றாயினும், இக்காலத்தில் அது உலகத்தின்
பலபாகங்களிலும் மிகுதியாய்ப் பரவியிருப்பதற்குக் காரணம் என்ன வென்று பார்ப்போம். பௌத்தமதத்தின்
போதனைகள் மிகச் சிறந்தவைகளாம். அவற்றுள் முக்கியமானதும், அம்மதத்திற்கு உயிர் நிலைபோல்
விளங்குவதுமான போதனை ஜீவகாருண்ணிய ஒழுக்கமேயாம். பௌத்தமதம் இன்றைக்குச் சுமார் 2500
வருடங்களுக்கு முன்னரே இந்தியாவில் தோன்றியிருக்கக்கூடுமாயினும், அது மிகப் பிரபலமாய்ப்பாவ
ஆரம்பித்தது கி. மு. 242 - - - ஆம் ஆண்டிற்குப் பிறகுதான், - அதாவது
அசோகமன்னன் காலத்திற்றான். இவன் பௌத்த சமயத்தை உலகயெங்கும் பரப்புவதற்காகப் பெரும்
முயற்சிகள் செய்தான், அசோகமன்னன்
தன் உற்றாரையும் உறவினரையும் வேறுபல பௌத்த உபந்நியாசகர்களையும் லோன், சைனா, தீபெத் முதலிய அந்நிய
நாடுகளுக்கும் இந்தியாவின் பலபாகங்க ளுக்கும் அனுப்பிப் பௌத்த சமயத்தைப்
பரவச்செய்தான். கல்வெட்டுக்களில் பொத்தமுனிவரின் உபதேசங்களைப் பதிப்பித்தான்.
இம்மன்னன் பிரஜைகளிடத்து அன்புடையவன். தயை
தாட்சண்ணியம் நிரம்பவாய்ந்தவன். * அசோகமன்னனுடைய
பெருமை அவனுடைய தேசத்தின் வில் தீரணத்தைப் பொறுத்த தென்று சொல்வதைக் காட்டிலும், இராச்சியபரிபாலனத்தில் அவன்
காட்டிய தாராள நோக்கத்தையும், உண்மையை நிலைநாட்டுவதில் அவனுக்கிருந்த
விருப்பத்தையும் பொறுத்ததென்று சொல்லலாம்; விக்கிரமாதித்தன், ஆக்பர் இவர்கள் கூட அவனைப்போல்
உலகப்பிரசித்தியான கீர்த்தியைப்பெற்றார்கள் இல்லை.''
[* Vide Romesh chunder Dutt's
Ancient India.]
இம்மன்னனுடைய கல்வெட்டுக்களில் காணப்படும்
பெளத்தமத உபதேசங்களில் முக்கியமானவை சில பின்வருமாறு: -
(1) யாகத்திற்காக எந்தவகையான மிருகங்களையும்
கொல்லக்கூடாது
(2) பெற்றோரிடத்து அன்பாயிருத்தல் வேண்டும்
(3) உற்றார் உறவினரிடத்துத் தயாளமாயும்
தாராளமாயும் இருத்தல்வேண்டும்
(4) ஜீவப்பிராணிகளுக்கு எத்தகைய துன்பமும்
இழைக்கலாகாது
(5) இருதயசுத்தி. இன்னும் இவை போன்ற பல
உபதேசங்கள் அசோகன் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.
''ஆனால் கடவுளைப்பற்றியாவது, ஆன்மாவைப் பற்றியாவது, புத்தரைப் பற்றியாவது, புத்தமதத்தைப் பற்றியாவது
ஒருவார்த்தைகூட அசோகனுடைய கல்வெட்டுகளில் இல்லை''
என்று புரொபஸர் ரிஸ் டேவிட்ஸ் (Rhys Davids) 'பௌத்த இந்தியா'
(Buddhist India) என்னும் அரிய நூலில்
வற்புறுத்திக் கூறுவதால் 'கடவுள்
விசாரணை'' ''ஆன்மவிசாரணை"
அசோகமன்னன் மனத்தை அவ்வளவாய்க் கவரவில்லை என்பது புலனாகிறது பௌத்தமத சம்பந்தமாய்
விரிவாய் அறிவதற்கு 'மணிமேகலை' “சிந்தாமணி'' முதலிய
சங்கத்தமிழ் நூல்கள் கருவியாய் இருக்கின்றன. இன்னும் விரிப்பிற்பெருகும்.
சாங்கிய மதத்தை ஸ்தாபித்தவர் கபிலமுனிவர். “மூலப்பிரசிருதி நித்தமாயும்
வியாபகமாயும் அருவமாயும் சடமாயும் இருப்பதாகும். நிலம் முதல் புத்தி ஈறான
இருபத்துமூன்று தத்துவங்களும் இந்த மூலப்பிரகிருதியி லிருந்தே தோன்றுகின்றன. இந்த
மூலப்பிரகிருதி இருபத்து நான்காம் தத்துவமாகும். இந்த இருபத்து நான்கு
தத்துவங்களுக்கும் வேறாய் நித்தமாய், வியாபகமாய்,
அருவாய், அறிவாய் நிற்கும் ஆன்மா
இருபத்தைந்தாம் தத்துவமாகும். தாமரையிலையில் நீர் பற்றற்று இருப்பதுபோல் ஆன்மா
பெத்தநிலையிலும் முத்தி நிலையிலும் ஒரே தன்மையாக இருக்கும். அவிச்சையினாலேயே
ஆன்மாவுக்கு இன்பதுன்பங்கள் உண்டாகின்றன. தான் வேறு மூலப்பிரகிருதிவேறு என்று ஆன்மா.
பகுத்துணரும் போது அவிச்சை நீங்கும். அவிச்சை நீங்குவது தான் முத்தி எனப்படும்.
ஜீவான்மாக்களுக்கு வேறாய் இறைவன் ஒருவன் உண்டென்பது பொய்" என்னும் இவை போன்ற
கொள்கைகள் சாங்கிய மதத்தினரின் கொள்கைகளாகும்.
மூலப்பிரகிருதி கட்புலனுக்குத் தோன்றும் பிரபஞ்சமாய்க்
காரியப்பட்டிருக்கும் நிலையை வியக்தநிலை என்றும்,
கட்புலனுக்குத் தோன்முமல்
சூக்குமமான காரண நிலையை அது அடையும்போது அவியக்த நிலை என்றும் சாங்கிய மதத்தினர்
கூறுப.
சாங்கிய மதத்தினால் கூறப்படும் சற்காரியவாதம்
சைவசித்தாந்தத்திற்கு உடன்பாடானது, சாங்கிய மதத்தினர் புத்தியையும் அறிவையுமே
ஆகாரமாகக்கொண்டு விஷயங்களை ஆராய்பவர்களா கலால் அவர்கள் (Rationalists) எனப்படுவார்கள்.
இங்கிலாந்திலுள்ள' ராஷனலிடிஸ்டிக் பிரஸ் அஸோஸியேஷன்'' என்னும்
சங்கத்தைச் சேர்ந்தவர்களைச் சாங்கிய மதத்தினர் என்று கூறுவது இழுக்காகாது. இனி
விரிப்பிற் பெருகும்.
தருக்கம் (Logic)
வைசேடிகம்,
சையாயிகம் இரண்டும் 'தாக்கம்'' என்னும் ஒரே
தலைப்பினுள் அடங்கும். இவற்றுள் வைசேடிக நூல் செய்தோன் கதைமுனிவர் என்பவர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், காலம், திசை, ஆன்மா, மனம் என்னும் ஒன்பது
திரவிபங்களின் இயல்பையும், குணம், தொழில் சாதி, விசேடம், சமவாயம், இன்மை என்னும் ஏனைய
ஆறுபதார்த்தங்களின் இயல்பையும், இவற்றின பிரிவுகளின் இயல்பையும் விளக்குவது
வைசேடிகம் எனப்படும். திரவியம் ஒன்பதுள் நிலமாதிய நான்கும் ஸ்தூல ரூபத்தில்
அதித்தியமென்றும் சூக்குடிப்பாமாணு ரூபத்தில் நித்தம் என்றும்; காலம், திசை, ஆகாயம் மூன்றும் தனித்தனி
ஒவ்வொன்றாய் வியாபகமுடையன என்றும்; ஆன்மா பரமான்மா சீவான்மா என இருவகைப்படும்
என்றும்; இவற்றுள்
பரமான்மா ஒன்றாய், நித்தமாய், வியாபகமாய், முற்றுணர்வுடையதாய், எல்லாம் வல்லதாயிருப்பதாமென்றும்; சீவான்மா வியாபகமாய்
எண்ணிறந்தனவாய் இருப்பதாமென்றும்; பரமான்மாவின் இச்சைவசத்தால் உலகந்தோன்றி
ஒடுங்குமென்றும்; வேதம்
பரமான்மாவால் செய்யப்பட்டதென்றும்; சீவான்மாவினைக்கீடாய்ப் பிறந்து இறந்து
இன்பதுன்பங்களை அனுபவிக்குமென்றும்; மனத்தோடு கூடாதவழி ஆன்மாவுக்கு அறிவில்லை
என்றும் ''வைசேடிகம்'' கூறா
நிற்கும்.
குணங்கள் திரவியத்தைப்பற்றுக் கோடாகக்கொண்டு
நிகழ்வன. சுவை, கந்தம், உருவம் முதலிய இருபத்து நான்கு
பிரிவாகக் குணங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் புத்தி, இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, முயற்சி அறம், மறம், என்னும் எட்டுக்குணங்களும்
ஆன்மாவின் சிறப்புக்குணங்கள், இம்மூன்று குணங்களும் பரமான்மாவுக்கு
நித்தியுமாயும் சீவான்மாக்களிடம் அதித் தீட்மாயும் இருப்பன. தொழில் என்பது எழுதல், வீழ்தல், வளைதல், நிமிர்தல், நடத்தல் என; ஐவகைப்படும். சாதி, பரசாதி என்றும் அபரசாதி என்றும்
இரு வகைப்படும்.
சாதி என்பது பலபொருள்களுக்குப் பொதுவாயிருக்கின்ற ஒரு தன்மையாகும். விசேடம் என்பது
ஒவ்வொருபொருளுக்கும் உள்ள சிறப்புத்தன்மையாகும். பஞ்சபூதங்களின் வேறு பாடுணர இது
அவசியமாகும். அவயவத்திற்கும் அவபவிக்கும் நீக்கமின்றி ஏற்பட்டுள்ள இயைபுசமவாய
மெனப்படும். இன்மை என்பது முன்னபாவம், பின்னபாவம்,
என்று மபாவம் ஒன் றினொன்றபாவம் என
நான்குவகைப்படும். இவைதாம் வைசேடிகத்தின் முக்கியமான கொள்கைகளாகும். வினைப்பயனின்
நுகர்ச்சிகழிந்து மனத்தோடு கூடாமல் ஆன்மா பாடாணம் போல் கிடப்பதே முத்தி என்பது
வைசேடிக மதத்தாரின் போதனையாகும். நையாயிக மதம் என்பது பெரும்பாலும் வைசேடிகமதத்தை
ஒத்ததேயாகும். ஆனால் இதற்கும் அதற்கும் வேறுபாடுகள் சில உண்டு. அவை
விரிப்பிற்பெருகும். நைபாயிகநூல் செய்தோர் அக்கபாத முனிவர் எனபவராவர்.
மீமாஞ்சை.
இம்மதத்தை ஸ்தாபித்தவர் ஜைமினி முனிவராவர்.
மீமாஞ்சை மதம் வேதத்திற் கூறப்பட்டுள்ள கருட காண்டப்பகுதிகளை மாத்திரம்
பிரமாணமாகக் கொள்ளுவதாகும். வேதம் அநாதியே சுயம்புவாயுள்ளது.'ஆன்மாக்கள் பலவாய் நித்தமாய்
வியாபகமாய் பிறப்பிறப்புடையவைகளாய், வினைப்பயன்களை நுகர்வனவாய் இருப்பனவாகும்.
வினையே துறக்கம் நரகம் முதலிய பயன்களைக் கொடுக்கவல்லது, சீவான்மாக்களுக்கு வேறாய்ப்
பரமான்மா என்பது ஒன்று உண்டென்பதும், உலகம் தோன்றி அழியும் என்பதும் பொய் உலகம்
எப்போதும் இவ்வாறே நிலை பெறும். இவைதாம் மீமாஞ்சை மதத்தின் முக்கியமான்
கொள்கைகளரகும். மீமாஞ்சை நூல் பன்னிரண்டு அத்தியாயங்களை உடையது. இம்மதத்தின் ஏனைய
கொள்கைகளையும் இவ்வத்தியாயங்களில் கூறப்படும் விஷயங்களையும் எடுத்துக் கூறப்புகுக்தால்
இவ்வு பக்தியா - சம் வரம்பின்றி விரியுமாதலின் இடத்தையும் காலத்தையும் கருதி
இவ்வளவோடு நிறுத்துகின்றாம். சான்றோர் குற்றங்களைந்து குணத்தைக் கொள்ளுவாராக!
சுபம்!
நாகை - ஸி. கோபாலகிருஷ்ணன்.
சித்தாந்தம் – 1913 ௵ - ஆகஸ்ட் / செப்டம்பர்
/ அக்டோபர் ௴
No comments:
Post a Comment