சுவாநுபூதி.
சுவாநுபூதி என்பது சுவ + அநுபூதி என்னுமிரு
மொழிகள் சேர்ந்த ஒரு தொடர் மொழி. இவற்றுள் சுவ என்பதற்குத் தன் என்பதும் அநுபூதி
என்பதற்கு அநுபோகம் என்பதும் பொருளாம். ஆகவே சுவாநுபூதி என்பதற்குத் தன் அநுபோகம்
என்பது பதப்பொருளாம். இப்பொருளை வகுத்தும் விரித்துமாராய்வதே இவ்வுபக் நியாசத்தின்
கருத்து.
வகை.
இனி தன் என்பது யாது? தன் தன்மையாது? அநுபவ மென்பது யாது? அநுபவம் நிகழ்வதெ தன்பொருட்டு? அநுபவத்திற்குரிய பொருள்யாது? அநுபவகாலத்தில் அநுபவிப்பானும்
அநுபவிக்கப் படும் பொருளு மெவ்வாறிருக்கும்? அநுபவ நிகழுமுறை எவ்வாறு? சுவாநுபூதி என்னுஞ் சொல்லுக்குப்
பொருளாய் சிறந்த அநுபவம் யாது? என எட்டு வகையாய் இவ்விஷயத்தை வகுத்துக்
கொள்கின்றேன்.
வி ரி.
1. தன்னென்பது
யாது: - உடல் தோறும் நான் என்னுஞ் சொற்குப் பொருளாய் இந்திரிய அந்தக் கரணங்களின்
வேறாயுள்ள உயிராம்.
2. தன்
தன்மையாது: - அறிவுடையதாய், அறிவித்தாலன்றி
அறியமாட்டாதாய், அறிவிக்க
அறியுங்காலும் ஒன்றனையறியுங்காற் பிறி தொன்றனை யறிய மாட்டா தாய், அறியப்படும் பொருளில் வியாபக
முள்ளதாய், யாதானு
மொன்றை பற்றியன்றித் தனித்து நிற்கமாட்டாதாய் விளங்குவது.
3. அநுபவமென்பது
யாது: - ஒரு பொருளை யறிந்து அறிந்த அப்பொருளிலழுந்துவதே அநுபவம். அழுந்துவதாவது
பிறி தொன்றனையறியாது முன்னறிந்த தொன்றனையே மேலு மேலு மறிதல்.
4. அநுபவம்
நிகழ்வதெ தன் பொருட்டு: - உயிர்க ளெல்லாம் இன்பமே விரும்புதவின் அவ்வின்பங்
காரணமாய் அநுபவம் நிகழும்.
5. அநுபவத்திற்குரிய
பொருள் யாது: - அது உலகப் பொருளும் கடவுட்பொருளு மென இருவகைப் படும்.
6. அநுபவ
காலத்தி லநுபவிப்பானும் பொருளு மெவ்வாறிருக்கும்: - பிரிப்பின்றிக்
கலந்திருக்கும்.
7. அநுபவம்
நிகழு முறைமை யெவ்வாறு: - இன்பத்தையே பெற விரும்பும் உயிர் தன்னைச் சித்துப்
பொருளாயறியாது தேகமே யென யெண்ணி தேக சம்பந்தமான உலகப்பொருளை அநுபவிக்க
விரும்புகின்றது. விரும்புங்கால் யாதானு மொன்றைப் பற்றி யன்றித் தனித்து
நிற்கமாட்டாத உயிர் இந்திரிய அந்தக் கரணங்களைப் பற்றி நிற்கின்றது. நின்று உண்ணப்
படும் பொருளை நாவிந்திரியத்தாலும், கேட்கப் படும் பொருளை காதிந்திரியத்தாலும், பார்க்கப்படும் பொருளை கண்ணிந்திரியத்தாலும், மணக்கப்படும் பொருளை மூக்கிந்
திரியத்தாலும் பரிசிக்கப்படும் பொருளைத் துவக்கிந்திரியத்தாலும், நினைக்கப்படும் பொருளை மனத்தாலு
மறிந்து அநுபவிக்கும்.
அநுபவிக்குங்கால் மூலப்பகுதியின்
சாத்விதகுணதத்துவ சம்பந்தமாக அனுபவிக்கப் படும் பொருள் களினிடத்தின்பமுண்டாகும்.
முக்குணமு மாறி மாறி நிகழுமாகலின் அவ்வின்பமும் நிலை பேறின்றி மாறு தலையடையும்.
இன்பம் பொருளினிடத்துண் டென்னலாகாதோ வெனின்? ஆகாது. என்னை?
ஒரு பொரு ளொருவனுக் கின்பமாகவும்
பிறி தொருவனுக்குத் துன்பமாகவுங் காணப்படு தலானும் ஒருவனுக்கே ஒரு பொருளொருகாலத்
தின்பமாகவும் பிறி தொருகாலத்துத் துன்பமாகவுங் காணப்படு தலானு மென்க. உதாரணமாக
சுகஜீவியா யிருக்கின்ற ஒருவன் விரும்புகிற பால் பிற நோயாளியாலுந் தனக்கு நோய் வந்த
காலத்தும் வெறுக்கப் படுகிறது போலும்.
ஆகவே இன்பமுந் துன்பமு மோகமும் முறையே
தன்னிடத்துண்டாம் சாத்வித குணத்தினாலும் இராசத குணத்தினாலுந் தாமத குணத்தினாலு
முண்டாவதே யன்றி பொருளினிடத்தில்லை யாதலறிக. ஆயினுங் குணம், இன்ப, துன்ப, மோக
மாய்ப் பரிணமிப்பதற்குப் பொருளின்றி யமையாது வேண்டப்படும்.
இவ்வாறு உலகப் பொருளின் வழியா யுண்டா மின்பம்
நிலை பேறிலதாய்க் காணப்படவே, இவ்வுலக இன்பத்தை வெறுத்து நிலை பேறுடைய
இன்பத்தை நாடும். நாடவே, அவ்வின்ப
மிது வென அறியு மாற்றலின்றி அதனை யறிவிப்பானொரு குருவைத் தேடும். தேடவே, வேண்டுவார் வேண்டுவதே ஈந்தருளும்
பரமகருணா நிதியாகிய சிவபெருமான் குருவடிவமா யெழுந்தருளி வருவர். வரவே, உயிர் தன் குறையை
விண்ணப்பிக்கும். விண்ணப்பிக்கவே, இது காறுமுலகப் பொருளையே பற்றி நின்ற
உயிர்க்குகடவுள்'அப்பொருளிற்
றிருமேனி கொண்டெழுந்தருளியிருக்கும் சிவலிங்காதி மூர்த்திகளைத் தரிசித்துத்
துதிக்கும் படி உபதேசிப்பர். அவ்வுபதேசத்தி லுறைத்து நிற்குங்கால்
மூர்த்திகளினிடமா யழுந்தி ஒரு வித இன்பத்தை அநுபவிக்கும்.
இவ்வ நுபவமுந் தரிசிக்குங் காலன்றி
நிகழாமையின் அமைதிபெறாமல் மேலும் குருவை வினாவும். வினாவவே, புறத்துத்தரிசித்த மூர்த்தியை
உடம் பினகத்து ஒரு குறியில் மனத்தாற்பாவித்து வணங்கும்படி உபதேசிப்பர். அவ்வாறு
வணங்கி அம்மூர்த்திகளி லழுந்தி ஒருவித இன்பத்தை அநுபவிக்கும்.
அங்ஙன மநுபவிக்குங் கால் வடிவமின்றிய இறைவனை
வடிவிற் காண்ட லிழுக்கா மென யெண்ணி மேலுங் குருவை வினாவும். வினாவவே, யோக மார்கத்தை யுபதேசித்து
அருளுவர். அவ்வழி யொழுகுதலால் நாத கீதங்கள் கேட்கட்படுதலுஞ் சோதி முதலிய
காணப்படுதலு முண்டாம்.
இவ்வநுபவமு மிறைவனுடைய அகண்டாகார சச்சிதாநந்த
வியாபக விலக்கணத்திற்கு மாறுபட்டு - கண்டமாயும்,
அருவமாயுங் காணப்படுதலின் அதினு
மமைதிபெறாமல் மேலும் குருவை வினாவும். வினாவவே, இந்திரிய அந்தக் கரணங்களின் விருத்தி
உலகப்பொருளிற் செல்லாத நிலையைப் பெற்று மடங்கியிருப்பதை யறிந்து, தான் என்னு முயிர்ப் பொருளி
னுள்ளீடாய் இறைவனை யுணரும் ஞானமார்கத்தை உபதேசித்தருளுவர். அருளவே, அம்மார்கத்தி லுறைத்து நிற்றலால்
அறிவுக் கறிவாய் அநந்நியமாய் நிற்குஞ் சிற்சொரூபமாசிய சிவபரம் பொருளை யறிந்து
அதிற் கலந்து பேரின்பத்தை அனுபவிக்கும்.
இவ்வ நுபவத்தில் அநுபவிக்கப்படும் சித்பொருள்
பூரணமாயிருப்பதால் இதன் மேற் பிறிதொன்றை நாடுவதற்கு வேறு பொருளு மின்றாம்.
இந்திரிய அந்தக்காரணங்கள் தன் வசமாய் மடங்கி யடங்கி விட்டபடியால் நாடுமுளமு
மின்றாம்.
துணையை யின்றி பொருளை அறிய மாட்டாத வுயிர்
கருவிகள் மடங்கி யடங்கிய காலத்துப் பரம் பொருளை யெவ்வாற்றிய முடியு மெனின்
கருவிகளா லறியப்படுவ தழிபொருளே யாகலானும், அழியாத பரம் பொருள் கருவிகளா லறியப்படாத
தொன்றாதலானும், கண்விடயங்களை
அதனின் வேறாய சூரியனொளி கொண்டறியினும் சூரியனை யறிவதற்கு வேறு ஒளி வேண்டாதவ்வொளியையே
துணையாகக் கொண்டறிவது போல, அப்பரம்
பொருளை யதன்றிருவருளைத் துணையாகக்கொண்டு அறிதல் கூடு மென்க.
இக்கருத்துப் பற்றியே “நின்னருட்கண்ணால்
நோக்காதாரல்லாதாரே'' எனவும்
"அவனருளே கண்ணாகக் காணினலல்லால்'' எனவும் “அவனருளாலே யவன்றாள் வணங்கி' எனவு
மிவ்வாறே பிறவிடத்தும் அநுபவமுடைய தேசிகர்களருளிச் செய்வாராயினர்.
இன்பமெல்லாம் பொருளினிடத்தின் றெனவுந்
தன்னிடத்துளதாகி சாத்வித குணத்தா லுண்டெனவும் மேற் கூறியதனோடு முரணாது பொருள்
கொள்ளுங்கால் சிவபரம் பொருளை அறிந்தின் புறுதற்குங் குணம் வேண்டப்பட்டு கருவி
யடங்கி மடங்கிய தென்றது பொருந்தாதாம். பொருந்து மெனின், பொருளினிடத் தின்பமில்லை யென்ற
திழுக்காம். ஆதலின் விடுக்கு மாறென்னை யெனின் சாத்வித குணத்தாலின்ப முண்டாவது
கருவிகளாலுணாப்படும் உலகப் பொருளினிடத் தேயாம். அப்பொருள் தோன்றியழியு மநித்த
முடமையால் அதனிடத்தின்ப மின்று, தோன்றி.யழியாத நித்தப் பொருளை யறிவதற்கு ''யாவையுஞ் சூனியஞ் சத்தெதிராதலில்”
கருவிகட்கு முனைத்து நிற்கு மாற்றலின்றாம். கருவிகளு மின்றி அநுபவிப்பானையுந்
தன்னுளடக்கி நிற்ப தொரு பெரும் பொருளாதலானும் நித்தமாதலானும் அச்சிவபாம் பொருள்
இன்பமேயாம். இதுபற்றியே ஸ்ரீ மணிவாசகப் பெருமான் "ஈறிலாப்பதங்கள் யாவையுங் கடந்த வின்பமே"
என்றருளிச் செய்வாராயினர். சார்ந்ததன் வண்ணமா யழுந்தி நிற்குந் தன்மையுடைய
வுயிர்க்கு அவ்வின்பப் பொருளைச் சார்ந்து அதுவாயழுந்தி நிற்றலே யின்பமாம்.
இவ்வின்பம் உயிர்க்குச் சாத்வித குணத்தாலுண்டா மின்பம் போலநித்த மாகாது
நித்தமாதலிற் பேரின்பமாம். இதுவே கருவிகளின்றியுந் தன்னதாகவு மநுபவிக்கப்படுதலின்
சுவாநுபூதி என்னப்படும்.
இல்லது தோன்றா தென்னுஞ் சற்காரியவாதப்படி
கருவிகள் நீங்கியபொழுது தன்னிடத் துண்டாமின்பமே பரம் பொருளைச் சார்ந்த பொழுது
வெளிப்பட்டுத் தோன்றிற் றென்னலாகாதோ வெனின்? ஆகாது. என்னை. துன்பந்தரும் பொருளையு
மின்பந்தரும் பொருளையுஞ் சார்ந்தது வதுவாய் அழுந்தி நிற்றலே உயிரின்றன்மை
யாதலினென்க.
சிவபரம் பொருள் அநுபவப் பொருளாயின் அநுபவ
அறிவு அநுபவிக்கும் பொருள், அநுபவிக்கப்படும்
பொருள் ஆகிய மூன்றும் வேண்டப் பட்டு, படவே ஏனை யழிபொருளொடொப்ப அநித்தமும்
பேதமுமாதலால் இவ்வேறு பாடுகளொன்று மின்றி யிருத்தலே சுவாநுபூதி யெனின், இது பாடாணவாதமாம். அன்றியு மறிய
வேண்டிய ஆன்மாவினால் அறியப்படா தயின் சூனியவா தமுமாம். ஆதலின் பாடாணவாத முதலியன
வல்லாத தாய் அநுபவிக்கப்படும் பொருள், அநுபவம், அ. நுபவிப்பானாகிய மூன்றும் வேண்டப்பட்டு, படினும் விடயத்தைப் போலந்நியமாய்
நின்ற நுபவிப்பதே சுவா நுபூதியாம். இந்நிலையினையே அத்துவித மென்றனர் பெரியோர்.
ஆன்மா அருளோடு கூடி நின்று அந்நியமில்லாமமே
சிவாநந்தத்தை யநுபவிப்பது எது போலு மெனின்? சூரியப்பிரபையோடு கூடி நின்று கண் சூரியனை
யறியுமாறு போலென்க. அநுபவிப்பனென்ற போது அருந்தியமின்மை யெவ்வாறு கூடு மெனின்? சுழுத்தியிற் சுகமாய்த் தூங்கினே
னென்று சாக்கிரத்திற் சொல்லுகையாலாண்டு சுகத்தை யறிவதற்குத் தானுங்கருவியு
முளவாம். இலவேல் சாக்கிரத்திற் சொல்ல இயைபில்லை. இருப்பினும் வேறு நிற்பது மன்று.
இவ்வாறு அறியப்படும் பொருளாகிய சிவம், ஞான சொரூபியாய் ஆன்மாவினறிவைத் தன்னுளடங்கச்
செய்தலினால் ஒன்றாகியும், பொருட்டன்மையால்
ஆன்மாவிற்கு வேநாகியும், கிருபையினால்
ஆன்மாவைத் தனக்கு வடிவமாகக் கோடலினுடனாயும், நிற்றலால் நிட்டையிலான்மாவிற்குச்
சிவாநந்தாநுபவங் கூடும். கூடினும் வேறு நிற்பது மன்று. பிறர்க்கறிவிப்பது
மின்றாம்.
இன்றேல் அறிவானும், அறிவும், அநுபவமு முண்டென்ற செவ்வாறு
பெறுது மெனின், நிட்டையினின்றும்
நீங்கிய காலத்து மாணாக்கருக் கறிவுறுத்தலாற் பெறுது மென்க.
இச்சுவாநுபூதி நிலை நோக்கியே 'நினையுமா நினையே,'' ''விரும்புமா
விரும்பே,'' ''தொடருமா
தொடரே,” ''நுகருமா
நுகரே,'' “அறிவாயறிகின்றான்றானே” என ஆசிரியர்களருளிச்
செய்வார்களாயினர்.
அநுபவிக்கப் படுவதென்னவே ஏனைய போல சிவாநந்தமும்
அநித்தமாகாதோ வெனின் ஏனைய போல வேறு நில்லாமையானும்,
பெற்றவொன்றி லமைதிபெறாது
மீளுதல்போல மீளுத வின்மையாலும், பிறிதொன்றை விரும்புவது போல் விரும்புவதற்கு
வேறு பொருளில்லாமையாலுமாகாதென்க. இதனை "ஏகமாய் நின்றே பிணையடிக ளொன்றுணரப்
போகமாய்த் தான் விளைந்த பொற்பினான்,'' என்னுஞ்
சிவஞான போதச் சுருதியானு முணர்க.
வேற்ற நிற்கு மிந்நிலையி லநுபவமென்ப தொன்
றுண்டென்ற லெவ்வாறு கூடுமெனின் அறிந்த பொருளிடத் தழுந்துதலே அநுபவ மென்னுஞ்
சொற்குப் பொருளாதலானும், உயிர்
சிவபரம் பொருளை யறிந்து அதுவா யழுந்தி நிற்றலானும் கூடுமென்க. இதனை “சிவாநுபவம் சுவாநுபூதிகமாம்'' என்னுஞ் சிவஞான சித்தித் திருவாக்கானு
முணர்க.
இவ்வாறு சுவாநுபூதி யெய்திய வுயிர்
சிவனோடொற்றுமைப்பட்டு நிற்றலில் சிவசம மெனப்பட்டு சிவபெருமான் செய்தருளும் பஞ்ச
கிருத்தியங்களைச் செய்யுமோ வெனின்? செய்யாது. என்னை? முத்தியடைந்த ஒவ்வொரு உயிரும்
அவ்வாறு செய்யுமெனப்பட்டு அநேகேஸ்வரவாதமாய் முடியுமாதலானும், அவ்வாதம் சர்வஞ்ஞத்வாதி
இலக்கணங்களோடு முரணுமாதலானும், ஒன்றனைச் சார்ந்ததுவாய் நிற்குங்கால்
பிறிதொன் றனையுஞ் சார்ந்ததுவாய் நிற்றலுயிர்க்கின்மையின், சூரியனைச் சார்ந்ததுவாய் நின்ற
கண் சூரிய னெளியாய் நிற்பதன்றி சூரியன் போல பிறர்க்குப் பொருளை விளக்காதது போல
சிவபரம் பொருளைச் சார்ந்த வுயிர் அதுவாய் நிற்றலேயன்றி அது செய்யும் பஞ்ச
கிருத்தியத்தைச் சார்ந்து நிற்றல் கூடாதாதலானு மென்க. இது பற்றியே'' உயிர் தானுஞ்
சிவா நுபவமொன்றினுக்கே யுரித்து'' என்றருளிச் செய்தார் சித்தியாரில் ஸ்ரீ
அருணந்தி சிவாச்சாரியரும்.
அகமுகத்தி லிந்நிலையை யடைந்த வுயிர்க்குப்
பிராரத்ததேகமுள்ள வளவும் அத்தேக சம்பந்தமான அநுபவத்தின் பொருட்டுலகப் பொருளையு
மொரோவழி நோக்கவரும். வரினுங் கடலிற் சேர்ந்த நீர் tளினு மவ்வுவர் நீராய் மீளுவது போல
சிவாநந்தமாகவே உலகப்பொருளை யநுபவிக்கும். இம்மீட்சியும் வினையுள்ளளவும் இடையிடையே
தோன்றி வினை முடிவிலின்றாம். மீளுங்காலத்தும் பிராரத்த வினை தாக்குதலு மேல்வினை
யேறுதலுமின்றாம். இது பற்றியே “எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்கில்லை வினை, முற்செய்வினையுந்தருவான் முன்'' என சீவஞான
போதத்தினும் ''வருஞ்
செயல்களுண்டேல், முந்தனுடைச்
செயலென்று முடித்தொழுக வினைகண் மூளாவங்காளாகி மீளானன்றே” எனச் சித்தியாரிலும் “இருள்
சேரிருவினையுஞ் சேராவிறைவன், பொருள் சேர்புகழ்புரிந்தார் மாட்டு" எனத்திருக்குறளினு
மாசிரியர்களருளிச் செய்வார்களாயினர்.
8. சிறந்த
அநுபவம் யாது: -
சிவாநுபவமே ஏனைய போல மீளுதலின்மையிற் சிறந்ததாம்.
இதனைப் பெறுதற்குரிமையுடைய வுயிர்க்கு
வரும்பிறவிகளுள் மானிடப் பிறவியே இவ்வநுபவம் பெறுவதற்குச் சிறந்த துணையாம். ஆதலின்
பெறுதற்கரிய மானிடப் பிறவியை யெய்திய ஒவ்வொருவரும் சிவா நுபவமென்னுஞ் சுவாநுபூதியைப்
பெறுவதற்கு இறைவன் றிருவருள் துணை புரிவதாக,
முடிவுரை.
சுவானுபூதி. யென்னுஞ்சொல் தன்னனுபூதி
யென்னும் பொருளைத் தருமென்பதூ உம் இப்பொருளை எட்டுவகையாய்ப் பிரித்துக்கொள்ளப்
படுமென்பதூ உம் தன்னென்பது நானென்னுஞ் சொல்லிற்குப் பொருளாகிய வுயிரென்பதூஉம்
தன்றன்மை அறிவித்தா லறிதல் முதலியன வென்பதூஉம் அனுபவமென்பது அறிந்த
பொருளிடத்தழுந்துதலென்பது உம் அனுபவம் நிகழ்வது இன்பத்தின் பொருட்டென்பதூஉம்
அனுபவத்திற்குரிய பொருள் உலகமுங் கடவுளுமென இருவகைப்படு மென்பதூஉம் அனுபவ
காலத்தில் அனுபவிப்பானும் பொருளும் வேறற நிற்கு மென்பதூஉம் அனுபவம் நிகழும்
முறைமையில் உயிர் தன்னைத் தேகமென வெண்ணி உலகப்பொருள்களை அனுபவிக்குமென்பதூஉம்
அனுபவிக்குங்கால் தன்னிடத்துண்டாம் சாத்துவித இராசத தாமதகுணத்தால் முறையே
இன்பமுந்துன்பமும் மோகமும் உண்டாமென்பதூஉம் இவ்வின்பம் நிலைவேறிலை யெனக்கண்டு
நிலையுடைய இன்பத்தை நாடுமென்பதூஉம் நாடிக்குருவைத்தேடு மென்பதூஉம் சிவபெருமானே
குருவாயெழுந்தருளிவருவ ரென்பதுஉம் வந்து சரியை கிரியை யோகம் ஞானங்களை முறையே
உபதேசிப்ப ரென்பதூஉம் அவ்வு.பதேசங்கள் ஒவ்வொன்றினும் ஒவ்வொருவித அனுபவம்
நிகழுமென்பதூஉம் அவற்றுள் ஞானத்தினால் சிவபெருமானோடு இரண்டறக் கலந்து பேரின்பத்தை
யனுபவிக்கு மனுபவத்தில் உயிருக்குக் கருவிகளின்றென்பதுஉம் அவனருளாலே அவனைக் காணு
மென்பதூஉம் ஏனையுலகப் பொருள்கள் போல அநித்த மாகாமையின் சிவம் இன்பப்
பொருளாமென்பதுஉம் இவ்வனுபவித்தில் அனுபவம், அனுபவ அறிவு,
அனுபவிப்பான் ஆகிய மூன்றும்
உலகப்பொருளிற் போல வேறு நில்லாது அன்னியமாய் நிற்கு மென்பதூஉம் இதுவே சுவானு
பூதியென்பதூஉம் இவ்வனு பூதியுடைய உயிர் சிவானுபவத்திற்குமட்டும் உரிய தேயன்றி
சிவன் செய்யும் பஞ்சகிருத்தியத்தை செய்ய இயலாதென்பதூஉம் பிராரத்தவயத்தால் இவ்வனுபவ
மெய்திய உயிர் ' உலகத்து
மீளுங்கால் சிவானந்தமாகவே மீளுமென்பதூஉம் மீளினும் முன் வினை தாக்குதலும் மேல்வினை
ஏறுதலும் இன்றென்பதூஉம் இச்சிவானுபவயே சுவானுபூதி யென்னுஞ் சொல்லுக்குரிய பொருளாய்
சிறந்தனு பவமாகு மென்பதூஉம் மானுடப் பிறவி யெய்திய ஒவ்வொருவரும் இதனைப்பெறுதற்குரியா
ரென்பதூஉம் அல்வாறு பெறும் வண்ணம் இறைவன் றிருவருள் துணை நிற்பதாக என்பதுஉம்
பிறவுமாம்.
பொ. முத்தய்ய பிள்ளை.
திருவாவடுதுறை யாதீனத்துச்
சைவப் பிரசாகரர்.
சித்தாந்தம் – 1913 ௵ - ஜனவரி ௴
No comments:
Post a Comment