உ
சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
ஆன்மாவுக்குச்
சிற்றறிவு எதனால்
அறிவது.
வியாபகமான ஆன்மா ஆணவமலத்தான் மறைக்கப்பட்டு
அறிவு விளங்காது இருளிலக்கப்பட்டு விழித்த கண்போல விருக்கும் இந்தநிலை கேவலமாம்.
அதன்பின்பு ஆன்மா முன்செய்த நல்வினை தீவினைக்கேற்ற பயனை அனுபவிக்கும்படி கடவுள்
தநுகரணபுவன போகங்களைக் கொடுப்பர் அவற்றொடு கூடியிருக்கும் நிலைக்களம்
இந்தச்சகலத்தில் ஆன்மாசீவனா யிருக்கிறான் கடவுள் மாயா தநுகரணங்களைக்கொண்டு
ஆன்மாவினது அறிவை ஏகதேசமாக விளக்கி இருவினைப்பயனாகிய சுக துக்கங்களை
ஊட்டுகின்றார்.
அப்பொழுது பதியாகிய கடவுளுடைய இச்சா ஞானக் கிரியாசத்திகள்
பிரம்மர் விஷ்ணு ருத்திரன் மகேசுரன் சதாசிவன் என்னும் பஞ்சமூர்த்திகளை அதிட்டிக்க, அம்மூர்த்திகளுள்ளே
பிரமாவியஷ்டிரூப பஞ்சாக்கரமைந்தில் பிரமன் அகாரத்தைச் செலுத்துவர், விஷ்ணு, உகாரத்தைச் செலுத்துவர், உருத்திரன் மகாரத்தைச்செலுத்துவர், மகேசுரன் விந்துவைச்செலு த்துவர், சதாசிவன் நாதத்தைச் செலுத்துவர், இப்படிச்சூக்கும
பஞ்சாக்கரங்களாகிய அவற்றை அந்தப் பஞ்சமூர்த்திகள் செலுத்திய பொழுது அந்த
எழுத்துகளுள் அகாரம் மனத்தைச் செலுத்தும், உகாரம் புத்தியைச் செலுத்தும், மகாரம் அகங்காரத்தைச் செலுத்தும், விந்து சத்தத்தைச் செலுத்தும், நாதம் உள்ளத்தைச் செலுத்தும், உள்ளமானது காலம் நியதி கலை வித்தை
அராகம் என்னும் ஐந்து தத்துவங்களும் கூடிய கூட்ட மாகிய புருடதத்துவமாம்.,
இனி அகார உகார மகார விந்து நாதங்களாகிய
அக்கரமைந்தும் மனம் புத்தி அகங்காரம் சித்தம் உள்ளம் என்னும் கரணங்களைந்தனையுஞ்
செலுத்திய போது மனம்புறத்திலே இந்திரியவாயிலாகச் சென்று புறத்துள்ள விஷயங்களைக் கவரும்.
புறத்துள்ள விஷயங்களாவன சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம் என்னும் ஐந்துமாம்.
அவற்றைக் கவர்தற்குக், கருவியாயுள்ள
இந்திரியங்கள் காது, மெய், கண், வாய், மூக்கு என்னும் ஐந்துமாம்.
இவற்றுள் காது சத்தத்தை அறியுங்கருவியாயிருக்கும்.
மெய் பரிசத்தையறியுங் கருவியாயிருக்கும். கண் உருவத்தை அறியுங் கருவியா யிருக்கும், வாய் இரதத்தை
அறியுங்கருவியாயிருக்கும். மூக்கு கந்தத்தை அறியுங் கருவியாயிருக்கும். இந்தச்சத்த
பரிசரூப ரசகந்தமைந்தும் ஆகாசமுதலிய பூதங்களின் குணங்களாம் அவைகளே விடயங்கள் எனப்
படுவன.
அவற்றுள், சத்தம் ஆகாசமுதலிய ஐந்தினும், பரிசம் வாயுமுதலிய நான்கிலும், உருவம் தேயுமுதலிய மூன்றினும்
இரதம் நீரினும் பிருதிவியினும், கந்தம் பிருதிவியினுமிருக்கும்: இந்தப் பூதகுணமாகிய
விடயங்களை இந்திரிய வாயிலாக மனம்பற்றும்.
அதாவது, மனம் செவியிந்திரியத்தோடு கூடிநின்று
ஆகாசமுதலிய ஐந்தினுமுள்ள சத்தத்தையறியும், மெய்யிந்திரியத்தோடு கூடிநின்று வாயு முதலிய
நான்கினுமுள்ள பரிசத்தையறியும், கண்ணிந்திரியத்தோடு கூடிநின்று தேயு முதலிய
மூன்றினுமுள்ள உருவத்தையறியும், வாயிந்திரியத்தோடு கூடி நின்று நீரினும்
பிருதிவியினுமுள்ள சுவையையறியும், மூக்கிந்திரியத்தோடு கூடி நின்று
பிருதிவியிலுள்ள கந்தத்தையறியும், மனம் இவ்வாறு இந்திரிய வாயிலாகப்
பற்றியவிடங்களைச் சித்தம் சிந்திக்கும். அகங்காரம் கொன்டெழும், உள்ளம் அவற்றையறியும்.
புத்தியின் வாயிலாக உள்ளம் அறியும்போது அவை
சுகமும் துக்கமுமாக வேறுபட்டுத் தோன்றும் அவ்வேறுபாட்டுக்குக்காரணம் முக்.
குணங்களின் செயல்களாம். அதாவது, முக்குணங்களில் சத்துவகுணம் விடயங்களைச்
சுகமாக்கிக் காட்டும். தாமதகுணம் விடயங்களைத் துன்பமர்க்கிக்காட்டும். புருடன்
அக்குணசொரூபியாய் நின்று சுகத்துக்கங்களை நுகர்வன்,
இச்சுகதுக்கா நுபவம் வினைவசத்தால்
விளைவது, நல்வினைப்பயன்
சுகமாகவரும் தீவினைப்பயன் துன்பமாகவரும், விடயங்களில் வேறுபாடில்லை யாயினும்
வினைவசத்தால் முக்குணங்கள் அவற்றை வேறுபடுத்திக் காட்டும். வேறுபாடாக
அவற்றையுணர்தலே இன்ப துன்பாநுபவமாம் இவ்வறிவு நிகழ்ச்சியே சிற்றறிவின் விளக்கம்
இவ்வறிவு ஏகதேசமாக நிகழ்வதால், சிற்றறி வெனப்படும். வினை பக்குவமாகிய
அநுபவத்துக்கு வரும் போது கடவுள் தமது சத்தியினால் ஆன்மாவைச் சகலப்படுத்தி
உண்பிப்பர் பக்குவவினையில்லாத போது கேவலப்படுத்துவர் கேவலப்படுதல் உறங்குதலும்
சகலப்படுதல் விழித்தலுமாம் இவையிரண்டும் வினைக்கேற்ப நிகழ் வனவாம்.
ஆன்மாவும் தநுகரண புவன போகங்களும் வேறு வேறு
பொருள்களாயினும், ஆன்மா
மலமயக்கத்தால் தானும் அவையும் ஒன்றென வேறுபாடின்றிக் காண்பதால் அவற்றின்
குணங்களையெல்லாந் தன்னுடையதாகவும் அவற்றின் விளைவுகளையெல்லாம் தன்விளைவுகளாகவும்
கருதும் விபரீத ஞான மெனப்படும் இந்த விபரீதஞானத்தை விளைப்பது ஆணவ மலமேயாம்.
இதனால் வியாபகத்தையுடைய ஆன்மாக்களுக்குச்
சிற்றறிவு ஆணவ மலசம்பந்தத்தாலே வந்தது இவ்வாணவ மலமாகிய மூலமலவழுக்கைச்
சிவபுண்ணியமாகிய புடத்தால் மெல்ல மெல்லக் கழித்துப் பக்குவப்படுத்தி சத்தி கெடும்படி
செய்யின் பரிபக்குவமடைந்து தமக்கு அம்மல சம்பந்தத்தால் வந்த சிற்றறிவு கெட்டுப்
பேரறிவாளனாம் பரிபூரணராய சிவபிரான்றிருவருளெய்துவரென்பது பெறப்பட்டது.
சைவசூக்குமார்த்த போதினி.
சித்தாந்தம் – 1916 ௵ - ஜுலை ௴
No comments:
Post a Comment