சமய தருமக்கடமை. *
[*
இராமனாதபுரத்தில் 1910 - ம் ஆண்டில்
நிறைவேறிய 5 - வது சைவ
சித்தாந்த மகா சமாஜக்கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.]
கனம்பொருந்திய வைதிக சைவசமயப் பிரபுக்களே !
தாதையர் செய்வது போற்
செய்தல் தனயர்க்கு இயல்பாகலின்,
அறிவிற் சிறந்த எந்தையர் உபந்நியாசித்தலைக் கண்டு. குழந்தையறிவினையுடைய யானும்
உபந்நியாசிப்பது போல் “சமயதருமக்கடமை'' என்னும்
விஷயத்தைக்குறித்து உபந்நியாசிக்கத் தொடங்கினேன்,
யாழொடுங் கொள்ளா
பொழுதொடும் புணரா
பொருளறி வாரா ஆயினுந்
தந்தையார்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்
தம் மழலை
என்வாய்ச் சொல்லும் அன்ன
" வாகும்.
சைவப்பிரபுக்களே !
வேதாகமங்களின்
மெய்ப்பொருளை இனிது அறிவிக்கும் வைதிக
சைவமே சமயாதீத அருட்பெருஞ்சமயமாம். இது பரமசிவன், சகளநிஷ்களத் திருமேனி கொண்டருளிச் சதாசிவ
மூர்த்தியாய் நின்று, அநந்ததேவர்க்கருளிச்செய்த
சன்மார்க்கம். இதனை அநந்ததேவர் சீகண்டருத்திரக்கடவுளுக்கு அருளிச்செய்தார்.
சீகண்டருத்திரக்கடவுள் நந்திபெருமானுக்கருளிச்செய்தார். நந்திபெருமான் கணங்கட்கும், தேவர்க்கும், முனிவர்க்கும்
அருளிச்செய்தார்.
ஆளுடைய பிள்ளையார், வாகீசர், நம்பியாரூரர், வாதவூரடிகள்
என்னும் பரமாசாரிய சுவாமிகள் நால்வரும் தென்னாட்டில் திருவவதாரஞ்செய்து, சிவபிரான்
திருவருட்பெருஞ் செல்வர்களாய் விளங்கி, இவ்வைதிகசைவப்பிரதிஷ்டை திருவருண்முறையால் செய்தருளினார்கள். பரமாசாரிய
சுவாமிகள் நால்வரே யன்றிப் பத்தவிலாசத்தில் அடங்கிய தில்லைவாழந்தணர் முதலிய உண்மை
நாயன்மார்களும், இந்தவைதிகசைவச்
செந்நெறி போற்றி யனுஷ்டித்துத் திருவருள் விலாசம் உலகில் நிலையிட்டருளினார்கள்.
திருக்கைலாச பரம்பரைச் சந்தான சிவாசாரியர்களும், மற்றையோரும் இவ்வைதிகசைவ அருண்முறை விளக்கி
நிறுத்தியருளினார்கள். இச்சுத்தாத்துவித சித்தாந்தம் மாசிருட்டி தொடங்கி இன்று
காறும் இங்ஙனம் பரமசிவன் உபதேசமுறையில் வந்து இந்நில வரைப்பிற்கு ஓர் மலை
விளக்காய் நிற்கின்றது.
இவ்வைதிகசைவமானது, நாம் அறிவு
விளக்கம் பெற்று உறுதி எய்தி இன்பவாழ்வு அடைதற்குச் சாதகமாயிருத்தலின் ஞானாலயம்
என்றும், உலகத்தின்
சொரூபத்தினையும், ஆன்மாக்களின்
சொரூபத்தினையும், முழுமுதற்
கடவுளாகிய பரமான்மாவின் சொரூபத்தினையும், ஐயவிபரீதமில்லாமல் தெளிவாகக்
காட்டுதலின் ஞான தீபம் என்றும், நம்முடைய சரீரசுகத்திற்கும் ஆன்ம சுகத்திற்கும் அநுகூலமாகும் நன்மைகளை
விதித்து அவ்விரண்டு சுகத்திற்கும்
பிரதிகூலமாகும் தீமைகளை விலக்கி
நம்மைக்காத்தலின ஞான அரண் என்றும், நாம் பெறும் கல்வி செல்வம் அதிகாரம் முதலிய பேறுகளுக்கு ஏற்கும்படி
தாரதம்மியம் பெற்று அன்பு செய்து அளவளாவி வாழ்தற்குறியலௌகிக வை திக ஒழுக்கங்களை
நமக்குப் போதித்தலின் நீதிகிலயம் என்றும், நமக்குக் கரும் சாதனங்களை அறிவித்தலின் தந்திரகலா ரூபம் என்றும், நமக்குத் தெய்வ
உபாசனைகளைத் தெரிவித்தலின் மந்திரகலா ரூபம் என்றும், நித்தியாநித்தியவஸ்து விவேகத்தினை உணர்த்து
தவின் உபதேசகாலரூபம் என்றும்,
நம்முடைய இகபரசுகங்களுக்கு இன்றியமையாத சாதகங்கள்
எல்லாவற்றினையும் நமக்குக் குறைவறக் கொடுத்தலின் சர்வசத்தப் பிரமரூபமான ஒரு
கற்பகதரு என்றும் சொல்லப்படும்.
இவ்வைதிகசைவசமயத்தினராகிய
நம்மவர் அதனைப் போதிக்கும் வேதாகமங்களையும் வடமொழி தென்மொழி வடிவாய்நிற்கும் உண்மை
நூல்கள் பிறவற்றையும் கலை நூல்களையும் பிறர்க்குக் கற்பித்தல் செய்யாமையானும்
எல்லாரும் எளிதில் அறிந்துய்யப்
பிரசங்கித்தல் செய்யாமையானும்,
இக்காலத்தில் தன் விளக்கம் வரவரக்குன்று வதாகின்றது. சைவவிளக்கம் குன்றற்குக்
காரணம் நூல்களைக் கற்பித்தல் செய்யாமையும் எல்லாரும் உய்யப் பிரசங்கித்தல்
செய்யாமையுமே. இவ்விரண்டும் நடை பெறாமைக்குக் காரணம் தமிழ் மன்னர்களும், பிரபுக்களும், செல்வர்களும் ஆதரவு செய்யாமையே. ஆகவே, செல்வசிரேட்டர்களுடைய
அநாதரவே வைதிக சைவவிளக்கம் குன்றுதற்குக் காரணம் என்பது பெற்றாம். மன்னர்கள், பிரபுக்கள், செல்வர்கள்
என்னும் இவர்கள் ஆதரவு செய்யவேண்டுமென்பதனால் இத்திறத்தினோர் ஆயிரங்கணக்காக
ரூபாய்களை வாரி இறைக்க வேண்டும் என்பது
நங்கருத்தன்று. பின் என்னெனில் இவர்கள் முன்னின்று சிலதருமசட்டங்களை ஏர்படுத்தித்
தெய்வதூஷணையும் இராஜ தூஷணையும் செய்யாத ஒவ்வொரு சைவனுடைய வருவாயிலும் ஒரு
சிறுபங்கு நம்சைவசமயத்திற் கென்று தருமக்கடமை வாங்குவதே. நம்மரசர் நமக்கு அன்புடன்
உதவி புரிதலை நினைத்து நாமெல்லோரும் விளக்குவரி, நீர்வரி, நிலவரி, முதலிய
பலவிதவரிகளை மனமுவந்து கொடுக்கின்றோம். ஆனால் நம்மையளித்துக் காக்கும் இறைவனுடைய சமயத்திற்கென்று ஒருவித தருமவரியும்
கொடுப்பதில்லை. நம்மை ஆளும் இவ்வுலக அரசர்க்கு அன்பினால் பலவரிகள் கொடுப்பதுபோல்
நம்மையும் நம்மையாளும் அரசரையும் ஆளும் தெய்வநாயகனுக் கென்று ஓர் தருமவரியேனும்
அன்பினால் கொடுக்கலாகாதோ? நம்முன்னோர்களெல்லாம்
தம்வரவில், ஐந்திலொருபங்கு
தெய்வத்திற்கென்று கொடுத்து வந்தனர். இதனைத்தமிழ்மறை ஐந்தாம் அதிகாரத்து மூன்றாம்
பாட்டு வலியுறுத்தாநிற்கும். நம்முன்னோர் கொடுத்தது போல நாம் ஐந்தில்
ஒன்றும் கொடுக்கவேண்டுவதில்லை; ஐம்பதில்
ஒன்றும் கொடுக்கவேண்டுவதில்லை;
நூற்றில் ஒன்றும் கொடுக்கவேண்டியதில்லை; நூற்றம்பதில் ஒன்றும் கொடுக்கவேண்டுவதில்லை; நூற்றுத்தொண்ணூற்று இரண்டில் ஒன்று கொடுத்தால்
அதுவே மிக அதிகமாகும் அதாவது வரவில் ரூபா ஒன்றுக்கு ஒரு தம்படிவீதம் கொடுத்தால்
கொடுக்கப்பட்டதம்படிகள் அநேக ஆயிரங்கணக்கான தங்கசவரனாக மாறும். நமது தமிழ் நாட்டிலுள்ள
சைவரின் தொகையோ அநேக ஆயிரம். ஒவ்வொருவரும் தமது சமய விர்த்தியின் பொருட்டுத் தமது
வருவாயில் தம்படி வீதம் கொடுப்பார்களாகில் அத்தாமிரமெல்லாம் எண்ணிலாத்
தங்கமாகமாறும் என்பதற்கு என்ன ஐயம்? ஒவ்வொருவரும் இறைவனுடய நன்மார்க்கத்தின் பெயருட்டு உதவி புரிவரேல் அம்மார்க்க
விளக்கங்குன்றுமோ? சைவரெல்லாம்
ஒருமித்த மனத்தராய், அலக்ஷியம்
செய்யாது ஒருங்கு கூடி இவ்வற்ப தருமத்தைச் செய்யுந் தொழின் மேற்கொள்ளின் ஊர்கள்
தோறும்,
(1) அநேக
சைவசங்கங்களை ஏற்படுத்தவும்,
(2) அநேக
சைவப்பிரசாரர்களை எற்படுத்தவும்,
(3) அநேக சமய பாடசாலைகளைத் தாபிக்கவும்,
(4) அநேக சமய
நற்பத்திரிகைகளை வெளியிடவும்,
(5) அநேக அரிய
நூல்களை அச்சுவிமானத்திலேற்றவும் கூடும்.
1. சைவசங்கங்கள்: - தனித்தாயினும்
சிலர் மாத்திரம் கூடியாயினும் நம் இறைவனாகிய சிவபெருமானுடைய பணியை முடித்தல்
இயலாமையால், சைவசமயிகளாகிய
நம்மவர்களெல்லோரும் ஒற்றுமையுடையவர்களாய் ஒருங்கு கூடல்வேண்டும். அப்படிக்
கூடாதவழி இக்கருமம் சித்தி பெறாது. தமிழர்களாகிய நம்மவர்கள் யாதாயினும் ஒருகருமத்தை
நடத்துதற்கு ஒருங்கு கூடுதல் அரிது, ஒரேவழிக்கூடினும், ஐக்கத்தோடு
நிலை பெற்று எடுத்த கருமத்தை நிறைவேற்றல் மிக அரிது. அவர்கள் ஐக்கமே இன்றிப்
பெரும்பான்மையும் தங்கள் உள்ளத்தில் விளையும் பகையையே பாராட்டிக் கலகம் விளைத்து
எடுத்த கருமத்தைக் கைநெகிழ விடுதலே வழக்கம். இதுபற்றியே நம்மவர்கள் லௌகிக நெறி
வைதிக நெறி என்னும் இரண்டினும் மேன்மையடையாது, அவமதிக்கப்பட்டுத் தலை கவிழ்கின்றார்கள். சகோதரர்கள் பலர் தங்கள் பிதாவினுடைய
வீடு முதலியவற்றிற்கு இடையூறு நிகழும்பொழுது தங்களுள்ளே. எத்துணைப்
பகையிருப்பினும் அதனைச் சிறிதும் பாராட்டாது ஒற்றுமையுடையர்களாய்த் திரண்டு
அவ்விடையூற்றை நீக்கி அப்பிதாவுக்கு இனியர்களாய் ஒழுகுவது இயற்கை : அதுபோலவே
சைவசமயிகளாகிய நாமெல்லாம் நமது பரம்பிதாவாகிய சிவபெருமானுடைய நன்மார்க்கத்திற்கு
இடையூறு நிகழும் பொழுது நம்முள்ளே
எத்துணைப்பகை இருப்பினும் அதனைச் சிறிதும் பாராட்டாது ஒற்றுமையுடையர்களாய்த்
திரண்டு அவ்விடையூற்றை நீக்கி அச்சிவபிரானுக்கு இனியர்களாய் ஒழுகுவதன்றோ அழகு.
இப்படிச் செய்பவர்களன்றோ சைவ சமயிகளென்னும் பெயருக்கும் பாத்திரராவார்கள்.
இவ்வியல் பில்லாதவர்கள் அங்ஙனம் ஆவார்களா! ஆகார்கள் ஆகார்கள்.
நம்மவர்களெல்லாரும் பொறாமை
பகை முதலியவைகளின்றி ஐக்கியமுடையவர்களாய்க் கூடி, தங்கள் தங்களால் இயன்ற மட்டும் வாக்காலும்
காயத்தாலும் பொருளாலும் சகாயஞ் செய்து சைவசமயத்தை விருத்தி செய்து பெரும் புகழையும்
பெரும் புண்ணியத்தையும் அடைதற்குச் சமயசங்கங்கள் இன்றியமையாதவை.
அச்சங்கஸ்தாபனைக்குப் பெரும் பொருள் வேண்டும். அப்பொருள் மேற்சுட்டியபடி சிறிது
சிறிதாக வாங்கினாலன்றி வேறு வகையிற் சேகரித்தல் இயலாதென்க.
2. சைவப்பிரசாரகர்கள்: - சைவப்பிரசாரஞ்செய்வித்தல் எல்லாச் சிவபுண்ணியங்களையும் சிவஞானத்தையும் வளர்க்குங்
கருவியாய்ச் சிறந்துள்ள உத்தமோத்தம் சிவபுண்ணியம். நாம் இச்சிவபுண்ணியத்தைச்
செய்யாமையால் நமக்குச் சைவப்பிரசாரகர்கள் கிடைப்பது மிக அருமையாயிருக்கின்றது.
சைவப் பிரசாரகர்கள் குறைந்திருத்தலினால் ஆயிரங் கணக்கான சைவரும் நமது சமயக்கருத்தை
நன்கு உணராதிருக்கின்றனர்.
பழவினையினாலும்
காரணங்களினாலும் நம்மவர்க்கு வியாதி உண்டாகும்போது, அவ்வியாதி நீக்கத்தின் பொருட்டு அவர்கள்
வயித்திய சாலைகளில் மாதக்கணக்காகவும் வருடக்கணக்காகவும் தங்க நேரிடுகின்றது.
அவ்வாறு தங்குங் காலங்களில் அவர்கள் நெற்றி, எம்பெருமானுடைய பவள மேனியிற் பூசப்பெற்ற தவளநீற்றினை அறியாதிருக்கின்றது.
அவர்கள் நா இறைவன் திருநாமத்தினை நவின்றறியாதிருக்கின்றது. அவர்கள் செவி
மரணகாலத்தினும் எஞ்செல்வப்பெருமான் திருப்புகழினைக் கேட்டறியாதிருக்கின்றது.
அவர்கள் எல்லாம் மிருகம்போல் பூச்சின்றியும்'வழுக்கி வீழினு நின் திருப்பெயரல்லால் மற்று நானறியேன் மறுமாற்றம்'என நமது
நம்பியாரூரர் கூறியதைக் கடைப்பிடித் தொழுகலிலராய் ஆடு மாடுகள் போல மறுமாற்றத்தை
மொழிந்து அலறியுங் கூவியும் உயிர் தூறக்கா
நிற்பர். இவ்விளைவு நமக்குத் தகுந்த சைவப்பிரசாரகர் இல்லாமையால் உண்டாகின்றது.
பிரசாரகர்கள் நாடோறும் மாலைவேளைகளில் வயித்திய சாலைகட்குச் சென்று ஆங்குள்ள
பிணியாளர்களைக்கண்டு அன்னார் தேக. நலிவை விசாரித்து அவர்கள் மனம் உலகக் கவலைகளிலே
செல்லவொட்டாமலும், சிறிதாயினும்
அதைரியம் அடையாமலும், உயிர்க்குயி
ராயுள்ள கடவுளை இடையறாது எந்நேரமும் மெய்யன்போடு தியானிக்கச்செய்து, வியாதி
அதிகப்படுந்தோறும் பிணியாளர் தமக்கு அன்னியராய் இருக்கும் மனைவி மக்கள் முதலிய சுற்றத்தாரிடத்துள்ள பற்றை
நீக்கித் தமக்கு அன்னியராய் இருக்கும் எம்பெருமானிடத்துள்ள பற்றையே வளர்க்கத்
தூண்டி "நாம் சிற்றறிவுடையேம்; ஆதலினால், நமக்கு
நன்மையாவது இது தீமையாவது இது என்று
நாமறியமாட்டோம்: கடவுள் எல்லா அறிவோடும் எல்லா அனுக்கிரகமும் உடையவர்; ஆதலினால், அவர்
நமக்குயாது செய்வாரோ அதுவே நமக்கு நன்மையாகும் என்று துணிதல் வேண்ெமயன்றி
எல்லாவறிவும் எல்லா முதன்மையும் எல்லாவனுக்கிரகமுமுடைய கடவுளை அநியாயமாக கொந்து
அதிபாதகனாகப்படாது'' எனப்
போதித்துத் தேவாரப்பதிகம் ஒன்றினை ஓதி வினையினை நீறு செய்யும் நீற்றினைக்கொடுத்து
வருவாரேல் நமது சமயம் அபிவிருத்தி அடையும் என்பதற்கு ஐயமுண்டோ? இல்லை இல்லை.
பிரசாரகர்களோ முதியவர்களாயிருத்தல் வேண்டும். அன்புடன் உழைக்கும் முதிய
பிரசாரகர்கள் கிடைப்பரேல் அது நமக்கு ஊதியம் கிடைப்பது போலாம். அறிவிலும் வயதிலும்
முதிர்ந்த பிரசாரகர்கள் கிடைப்பின் அவர்களை வயித்திய சாலைகட்கனுப்பலோடு விடாது
சிறைச்சாலைகட்கும் அனுப்பி அவ்விடத்துள்ளார்க்கு, பிறருடைமையாயிருப்பதி யாதொரு பொருளையும் அவரை
வஞ்சித்துக் கொள்ளக்கருதாமையாம் கள்ளாமை, காமமும் பொருளும் பற்றி நிகழ்வதாய பொய்மையை விலக்கும் மெய்யினது தன்மையாகிய
வாய்மை, ஐயறிவுடையனவீறாய
உயிர்களைச் சோர்ந்துங்கொல்லுதலைச் செல்லாமையாம் கொல்லாமை முதலிய சிறந்த விஷயங்களை
எடுத்துரைக்கச் செய்தல் வேண்டும்.
நஞ்சிறார்க்கும் சிறுமியர்க்கும் நஞ்சமயத்தைப் போதிக்குமாறு இவர்களைச்
சைவர் வீடுகளுக்குமனுப்பல் வேண்டும்.
இப்பிரசாரகர்கள்
செய்யவேண்டுவது வேறொன்று முண்டு. இவர்கள் திருக்கோயில் திருமடம் முதலிய
சுத்தஸ்தானங்களில் புராணங்களை நியமமாக விதிப்படி படித்தலும் அவைகளுக்கும் பொருள்
சொல்லலுமே. இனிய சொற்களால் அடியார் சரிதங்களைக் கேட்போர் நெஞ்சமும் உருகுமாறு
எடுத்துரைத்தல் வேண்டும். உள்ளன்புடன் சரிதம் எடுத்து உதைக்கப்படின் கேட்போர்
நெஞ்சமும் உள்ளன்பால் உருகும் என்பதற்கையமில்லை. அன்புடன் உரைக்கப்படாவிடின்
அவ்விஷயம் கேட்போர் மனத்தினை உருக்கமாட்டாது. நமது சமயாசாரிய சுவாமிகளுள் ஒருவராய
ஆளுடைய அடிகள் கரைந்தமனத்துடன் இயற்றிய திருவாசகம் இதற்குச் சான்று பகரும்.
அன்புடன் உரைத்தல்'அழுமூஞ்சிப்
பிரசங்கம் எனமதிக்கப்படும் என்றஞ்சி சிலர் சைவப்பிரசங்கஞ் செய்கையில் இலக்கணநூல்
விதிகளை எடுத்துரைத்து மகிழ்வர்;
சிலர் " மயிருக்கு மிஞ்சின கறுப்புமில்லை மச்சானுக்குமிஞ்சின உறவுமில்லை'' என்பது போன்ற
அருவருக்கத்தக்க பழமொழிகளை எடுத்துரைத்து வேடிக்கை செய்வர்; வேறு
சிலர் மங்கையர்கள் அவயவ வர்ண? ன
வருமிடங்களைத் தவறவிடாது அவ்வர்ணனைகளை மிக நன்றாய் விளக்கி மனம் பூரிப்டர்; இன்னுஞ் சிலர், புண்ணியவசத்தால்
இறைவன் பெயரைத் தம்பெயராகக் கொண்டுள்ளதை மறந்து அப்பெயர்க்கு முன்னர் கடல், காற்று, மிருகம் முதலிய
பட்டப்பெயர்கள் பொருந்து தலைப்பெற அவாவி, விண்டுவின்வராக அவதாரத்தினைக் குறிக்கும் சந்தர்ப்பங்களில் சிவனடியாராகிய
அவ்விண்டுவைச் சாதாரண வராகமாகவே மதிக்க அவர்கள் உடனே நாட்டு வராகத்தினை மேய்ப்பவர்
நிலையை அடைந்து அதனோடு அடியார் தூஷணைக்கும் ஆளாகின்றனர். தமக்கும் அவர்க்குமுள்ள
தாரதம்மியத்தைக் கவனியாதிருக்கின்றனர். இத்தகைய சண்டைப் பிரசங்கமும், வேடிக்கைப்பிரசங்கமும்
நமக்கு வேண்டுவதில்லை. நமக்குப் பத்தியுடன் பிரசாரஞ் செய்வோரே வேண்டியது. இதற்குப்
பெரும்பொருள் இருப்பின் அவர்களைப் பெறுதல் எளிதாகும். அப்பெரும்பொருள் பெறுதல்
மேற் சுட்டிக்காட்டிய வழி ஒன்றினால் தான் கூடும் என்பதாக. |
3. சைவசமயபாடசாலைகள்: - கமது சிறுவர்கள் அறிவுவலி சிறிதும் இல்லாதவர்கள். அதுமட்டோ, தங்கள் சமய
நூல்களாகிய வைதிக சாஸ்திரங்களை அணுவளவேனும் கற்று அறியாத துர்ப்பாக்கியர்கள்.
அறிவு வலியும் இந்து சமய சாஸ்திரப்பயிற்சியும் இல்லாத அந்த மாணவர்கள் இயற்கையான
மனக்கண்ணாடியில் பிறமதக்கொள்கைகள் படியும் பொழுது அந்தோ! அவர் பரிசுத்தமான
மனக்கண்ணாடிகள் மிலேச்சப் பொய்ம்மயமாய் விடுகின்றன. அப்படி பிறமதப்பொய்த் துகள்
அவர் மனக்கண்ணாடிகளில் படியப்படிய அவைகள் விளக்கங்குன்றிக் குன்றி மரத்
தன்மையுற்றுச் சுபாவங் கெட்டொழிகின்றன. அப்படி விவேக விளக்கங்குன்றிக் கெட்ட
அவர்கள் மனதில் பின்னர் வைதிகாசிரியர் போதிக்கும் ஆரிய சாஸ்திர போதனைகள் நுழைதற்கு
இடமில்லாமல் பஞ்சிற்பட்டு மீளும் பாணங்கள் போல் பிறகிட்டு ஒழிகின்றன. இந்து
மதசாஸ்திரக்கல்வி அவர் மனசிலே புகுதாமல் ஒழிதலொன்றோ, இயல்பாக அநுஷ்டிக்கப்பட்டு வரும் இந்து
வருணாச்சிரம தருமங்களும் அந்தத் துர் அப்பியாசத்தினால் அவர்கள் புத்தியை விட்டு
நீங்குகின்றன. பின் இவர் இந்து மக்கள் என்று தானும் சுட்டியறியக்கூடாதவண்ணம் இந்து
வாசனையுமற்று அவர் முழுமிலேச்சராய் விடுகின்றனர். தமது மெம்ச்சமய பத்தி யாசாரங்கள்
முழுதுங்கெட்டு இழிந்த பிறப்பின ராகும் இந்து மாணாக்கர்கள், சிலர் ஒரு சமய
நிலையும் இல்லாதவர்களாய் நாஸ்திகம் பேசி நாத்தழும்பேறுகின்றனர். இந்தப்பிரகாரம்
ஆபத்துகள் இந்து புத்திரர்க்கும் புத்திரிகளுக்கும் பிறசமய பாடசாலைக் கல்வி
பயிற்சியினால் விளை தலைக் கண்டும் கண்டும் நம்மவர்கள் தங்கள் அருமை மக்களுக்கு
அஞ்ஞான விருட்படலம் நீங்குமாறு சைவசமய பாடசாலைகளைத் தாபித்தாரில்லை,
இந்து மக்களுக்கு
வித்தியாப்பியாசம் என்னும் ஞானாமிர்தபானம்
இன்றியவையாத சீவன ஏதுவேயாம். ஆயின், நாவுக்கினிய அறுசுவை உணவு உடம்பினை
வளரச்செய்வதுபோலச் செவிக்கினிய வித்தியாமிர்தம்
உயிரறிவினை வளரச்செய்தற்குச் சிறப்புடைய சாதனமாகும். இனி விஷங்கலந்த சுவையுணவு உயிர் வாழ்விற்குக்
கேடுபயப்பதுபோல அஞ்ஞானங்கலந்த வித்தியாமிர்தம் அறிவினைப் பங்கப்படுத்தற்கே
ஏதுவாகும்.
இந்து மக்கள்
வித்தியாமிர்தமுண்டு நித்தியானந்த வாழ்வு பெற வேண்டின் தமது வைதிக சைவசமய சாஸ்திராமிர்தம் நாளு நாளும்
பருகுதலே நெறியாம். அதற்கு வைதிக சைவசமய கலாசாலைகள் இன்றியமையாதவை. ஆதலின்
அவைகளைத் தாபித்தல் வேண்டும். அங்ஙனம் தாபித்தற்குப் பெரும்பொருள் அவசியமன்றோ? அதற்குச்
சைவர்கள் மாசிகாம்சதானம், வார்ஷிகாம்ச
தானம், விதரணம்
என்னும் மூன்று திறத்தினவாகத் தங்கள் தங்களால் இயன்ற மட்டும் சங்கற்பித்துக்கொண்டு
கொடுத்தாலன்றோ அப்பெரும்பொருள் சேரும்.
4. நற்சமயபத்திரிகைகள்: - சமபயத்திரிகையாவது மனிதர்களுடைய
க்ஷேமத்திற்கு வேண்டிய நற்போதனைகளை எடுத்துப்போதிக்கும் கலாரத்னாகரமாம். அது
வொன்றோ, மனிதர் தம் முள்ளங்களிற்றோன்றும் புருஷார்த்த சாதனமாகும் அபிப்பிராயங்களை
ஒருவர்க்கொருவர் அறிவித்துத்தர்க்கித்துத் தெளிதற்கும், தெளிந்தபடி அனுட்டித்துப் பயன் அடைதற்கும், கருவியுமாம். சூரியன் தன்
கிரணசமூகத்தால் இருளையோட்டிப் பொருள்களைக் கண்ணுக்குக்காட்டுதல் போலச்
சமயபத்திரிகை தன் போதனைகளால் அஞ்ஞானத்தையோட்டி மனிதர் அறிவிற்குப் பொய்ப்பொருளின்
வேறாகமெய்ப் பொருளை இனி தெடுத்துக் காட்டும் ஞான சூரியனாம். அது மூர்க்கசனங்கள்
செய்து போதரும் அக்கிரம உஷ்ணத்தால் தகிக்கப்பட்டு வாடி நிலை தளரும் சன்மார்க்கப்
பயிர் தழைத்தோங்கும்படி ஞானாமிர்ததாரைகளைக் காலந்தோறும் வருஷித்து அதனைப்
பாதுகாக்கும் கருணாமேகமுமாம். பத்திரிகை தத்துவ உபதேசங்களை இனி தெடுத்துத்து
போதித்தலின் மாந்தர்க்கு ஆசிரியரை யொக்கும். செவிக்கினிய உணவுகளைக்
காலத்துக்கேற்பப் பிரியத்தோடு உதவுதலால் தாயரை யொக்கும். நல்ல கல்விகளைப்
பருவத்துக்சேற்கப்பயிற்றலின் தந்தையரை யொக்கும். இனிமையளாவி இடித்துறு தி
கூறுதலின் நட்டாரை யொக்கும். துஷ்ட நிக்கிரகஞ் செய்து கிஷ்ட பரிபாலனஞ் செய்தலின்
நீதி மன்னரை யொக்கும். எத்திற நன்மைகளும் பத்திரிகையால் விளையும். அத்தனை மாட்சிமை
யுடைய சமய பத்திரிகைகளை ஸ்தாபித்து நடத்தி வருதலின் மிக்க தருமம் மற்றொன்றில்லை.
பத்திரிகைகளின் மாட்சிமையும், அவற்றால் மனிதர்களுக்கு உண்டாகும் நன்மைகளும்
நம்மவர்களுள்ளே பெரும் பாலார்க்கு இன்னும் நன்கு புலப்படாதனவே. ஈம்மவருள்
கல்விகேள்விகளால் நாகரீகம் எய்திய
உயர்தரத்து வித்வான்கள் தாமும் பத்திரிகை நலத்தை மெய்த்திறமாக
அறியாதிருப்பாராயின், மற்றைட்டார் அதன் பெற்றியை
அறியாதிருக்கிறார்களென்றல் வீண் வார்த்தையேயாம். உண்மையாக விசாரித்துச்
சொல்லுமிடத்து நாம் நாகரீகராய் வாழ்தற்குக் காரணம் பத்திரிகை கெளென்றே
சத்தியமாய்ச் சொல்லலாம். எவ்விடத்தும், எக்காலத்தும், யாவர்க்கும், அவர் விரும்பும் புருஷார்த்த சித்திகளை
விரும்பியபடி வெளிநின்று பிரசாதிக்கும் கண்கண்ட தெய்வம் பத்திரிகைகளேயாம்.
மண்கொண்ட வெண் குடைக்கீழாக மேற்பட்ட மன்னரும் பத்திரிகைகளின் பண்கண்டு சிரமேற்
கொள்வரேல்,
அப்பத்திரிகைகளை விண்கண்ட சமயத் தெய்வ ரூபமாகவிவேகிகள் மதித்துப் பாராட்டல்
வேண்டும் என்பது துணிபு.
இத்திராவிட தேசத்தில் பற் பல பத்திரிகைகள் அங்கங்கே பலரால் காலந்தோறும் தொடக்கஞ் செய்யப்பட்டன. அப்படித்
தொடக்கஞ் செய்யப்பட்ட பத்திரிகைகளுள் இடையூற்றினால் நடைபெறா தொழிந்தன பல.
இடையூறின்றி நடை பெற்று வருவனசில. நடை பெற்று வரும் சில வற்றுள்ளும் சமய விஷயம்
போதிப்பன இரண்டொன்றே. சமயவிஷமே போதிக்கும் பத்திரிகைகள் மிகவும் அஃகியிருத்தலினாலே
அதனை விருத்திசெய்யும் தொழிற்றுறையுள் நாம் இறங்கவேண்டும். அவ்வாறு இறங்கற்கு
நமக்குப் பொருள் வேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும். அப்பொருள் சேர்தற்கு
தருமரூபமாக ஒவ்வொருவரும் உபகரித்தே தீரவேண்டும்.
5. அரிய நூல்களை அச்சுவி மானத்தேற்றல்: - அச்சு விமானம் ஏற்ப பெறாதுள்ள நூல்கள் இன்ன இன்ன என்பதும், அச்சு விமானப் ஏறாது இறந்த நூல்கள் இன்ன இன்ன என்பதும், அச்சு விமானம் ஏறுவதால் விளையும் பயன் இன்ன இன்ன என்பதும் எல்லாரும் அறிந்த
விஷயமாகலின் அவற்றை இவ்விடத்து யாம்விரித்துரைக்க வேண்டுவதில்லையாம் அவற்றை
எடுத்துரைப்பதினும் பிரம்மஸ்ரீ இரமண சாஸ்திரியார் அவர்கள் தம் அனுபவத்தை
எடுத்துரைக்கின் மிக நன்றாயிருக்கும். சாஸ்திரியார் அவர்கள் பால் அநேக அரிய
ஏடுகளுள்ளன. நம் அனாதரவால் அவைகள் வெளிவரா திருக்கின்றன.
மேற் சுட்டிப் போந்த சிவ புண்ணியங்களைச் செய்யத்திரண்ட திரவியம் வேண்டு
மென்பது சொல்லாமலே விளங்கும். சிவபத்தர்கள் தங்களிடத்துள்ள திரவியத்தை மூன்று
பாகம் பண்ணி ஒருபாகத்தைத் தங்கள் சீவனத்தின் பொருட்டு வைத்துக் கொண்டு மற்றை
யிரண்டு பாகங்களையும் சிவபுண்ணியங்களுக்குக் கொடுத்தல் வேண்டும் என்று சிவாகமங்கள்
சொல்கின்றன. இப்படிக் செய்தல் அரிதாயினும், சைவசமயிகளாகிய
நம்மவர்களெல்லாரும் உலோபஞ் செய்யாது, மேற்கூறிய
சிவபுண்னியங்களின் பொருட்டுத் தங்கள் தங்கள் வருவாயில் ரூபாய் ஒன்றுக்கு ஒரு
தம்படி வீதமேனும் உபசரிக்கக் கடவர்கள். இப்படிச் செய்யின் " ஆயிரமாகாணி
அறுபத்திரண்டரை''
என்றபடியே நம்மவர்களால் உபகரிக்கப்படும் பொருள் மிகப் பெருகி வளர்ந்து, சிவ புண்ணியங்களெல்லாம் இனிது நிறை வேறுதற்குக் காரணமாகும்.
கனம் பொருந்திய பிரபுக்களே, இத்தேசத்தவர் இவ்வூரவர் இவ்வியல் புடையர் என்று
உங்களாலே நன்றாக அறியப் படாதவர்களும் தருமத்தை நடத்துதற்கு அறிவும் ஆற்றலும்
இல்லாதவர்களும் தருமத்திரவியத்தின் வரவு
செலவு கணக்கை உலகத்தார் அறியும் வண்ணம் வெளிப்படுத்துதற்கு உடன் படாதவர்களுமாய்
உள்ளவர்கள் உங்களிடத்தே தனித்தனிவந்து தருமத்தின்பொருட்டு யாசிக்கும் பொழுது, நீங்கள் பெரும் பான்மையும் தடைபேசாது உங்கள் உங்களால் இயன்ற மட்டும் திரவியம்
உபகரிக்கின்றீர்களே. அத்திரவியத்தைப் பெறுவோர்களுள்ளே தாங்கள் சுட்டிய கருமத்தைத்
தொடங்குவோர் சிலர். அவர்களுள்ளும் பெற்ற திரவிய முழுதையும் அத்தருமத்தில்
உபயோகப்படுத்து வோர் மிகச்சிலர். திரவியம் பெறும் பொழுது முழுதையும் தருமத்தில்
உபயோகப் படுத்துங் கருத்துடையவருக்கும் அக்கருத்து அத்தருமம் முடிவு பெறும்
வரையும்நிலைபெறுதல் அரிது. ஒருபோது நிலைபெறினும், அவர் காலத்திலே அத்தருமம் நிறை வேறாவிடத்து, அவருக்குப்பின் அத்திரவியம் அத்தருமத்தில் சேர்வது மிக அரிது அரிது. பெற்ற
திரவியத்தைக் கொண்டு தருமத்தைமுடிப்பவருள்ளும் சிலர் தாம்
கல்வியறிவில்லாதவராதலாலும், கல்வியறிவுடையவரோடு
சிறிதும்பரிசயமில்லாதவராதலாலும், எடுத்த தருமத்தை விதிப்படி நடத்தா தொழிகின்றனர்.
இங்ஙனமாதலின்,
நீங்கள் வருந்திச் சம்பாதித்த திரவியம் தருமத்தின் பொருட்டுக் கொடுக்கப்பட்ட
விடத்தும்,
தருமத்தில் உபயோகப்படுவது சிறுபான்மை. இதற்குக் காரணம் நம்மவர்களுள் ஒரு
தருமத்தை ஒருவரே தனித்து நடத்துதலாம்.
தருமங்களையும் அவைகளின் பலங்களையும் அவைகளைச் செய்யும் முறைமைகளையும் அறியவும்
அறிவிக்கவும் வல்லவர் கல்வியுடைய வராதலாலும், உபகரித்து முடிக்கவல்லவர்
செல்வமுடையவ ராதலாலும், இவ்விருதிறத்தாருள்ளும் பலர் சபையாகத்திரண்டு
விதானங்கள் செய்து கொண்டு அவ்விதானங்களின் படியே தருமங்களை நடத்தப்
புகுவார்களாயின், அத்தருமங்களெல்லாம் விதிப்படி நிறைவேறும்.
அவற்றின் பொருட்டுக் கொடுக்கும் பொருண் முழுதும் தருமத்திற்றானே உபயோகப்படும்.
ஆதலினால், நம்மவர்களுள்ளே தருமஞ் செய்யக் கருத்துடைய வர்கள் யாவரும் இச்சபையிற் சேர்தலே
உத்தமோத்தமம்.
யாவராயினும் ஒருதருமத்தின் பொருட்டுத்திரவியம் உபகரிக்கச் சங்கற்பித்த அக்கணமே
அத்திரவியம் தருமத்திரவியமேயாய்விடும். ஆகவே, அத்திரவியத்தைக் கொடா
தொழிந்தவர் தருமத்திரவியத்தை அப்கரித்த அதிபாதகராகி வருந்துவர். இது உண்மை நூற்
றுணிவு. ஆதலினால், நீங்கள் தருமத்தின் பொருட்டுச் சங்கற்பித்த
பொருளைச் சிறிதாயினும் தடையின்றி அச்சத்தோடும் அன்போடும் கொடுத்து விடல்
வேண்டும்.
புண்ணியத்தையேனும் பாவத்தையேனும் செய்தல், செய்வித்தல், உடன் படல், என்னும் மூன்றும் தம்முளொக்கு மாதலால், நீங்கள் இத்தருமத்துக்கு
உபகரித்தன் மாத்திர மன்றி, உங்கள் உங்கள் பந்துக்கள் இஷ்டர்கள்
முதலாயினோருக்கும் சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் நல்லறிவுச் சுடர் கொளுத்தி, அவர்களையும் இயன்றமட்டும் இத்தருமத்துக்கு உபகாரகர் களாக்க முயலல் வேண்டும்.
இச்சபையார் எக்காலமும் ஐக்கமும், தருமத்திலே சிரத்தையும்..
இடையறா முயற்சியுமுடைவர்களாகி முன்னிற்குமாறு முதலில் யாம் வேண்டிய கனம் பொருந்திய
பிரபுக்களைக் கொண்டு விதிகள் ஏற்படுத்திச் சமய தருமக் கடமை வாங்கி மேற்கூறிய
தருமங்களை விதிப்படி நிறைவேற்றிக் கொண்டு வருவாராயின், மற்றை நாட்டார்களும் தங்கள் தங்கள் நாடுகளில் இப்படியே சபை தாபித்துச் சிவ
புண்ணியங்களைப் பரிபாலனஞ்செய்து வருவார்கள். அப்பொழுது, அவைகளுக்கெல்லாம் இச் சபையார்களே மூலகாரணர்களாதலால், அப்புண்ணிய பலங்களிலும் இச் சபையார் பாகம் பெறுவார்க ளென்பதற்குச் சந்தேகம்
உண்டோ இல்லை இல்லை.
இப்பொழுது நாம் கூறியவாறே நடத்தப்படின், சிவபுண்ணியங்களும் சிவ
ஞானமும் அபிவிருத்தியாகும். ஆகவே, சபையார்களாகிய நீங்கள் உங்களுக்கும் பிறருக்கும்
பயன்பட்டு உங்களுக்கு இனியர்களாகி உங்களிலும் இனியராகிய சிவ பெருமானுடைய
திருவருளைப் பெறுவீர்கள். நமக்கு நம்மிலும் இனியர் சிவபெருமான், என்பது.
“என்னில் யாரு மெனக்கினி யாரிலை
யென்னி லும்மினி யானொரு வன்னுள
னென்னு
ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு
ளேநிற்கு மின்னம்ப ரீசனே.'”
என்னும் தேவரப்பதிகத்தால் பெறப்படும்..
திருச்சிற்றம்பலம்.
சே.
சோமசுந்தரப்பிள்ளை.
சித்தாந்தம் – 1912 ௵ - ஏப்ரல் ௴
No comments:
Post a Comment